கைது செய்! கைது செய்!: எடப்பாடி பழனிசாமியின் துரோக கூட்டத்தை கைது செய்..ராமநாதபுரத்தில் பன்னீர் ஆதரவாளர் ஒட்டிய சுவரொட்டியால் பரபரப்பு..!!

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, சி.வி.சண்முகம், கே.பி. முனுசாமி உள்ளிட்டவர்களை கைது செய்யக்கோரி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரால் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. ராமநாதபுரம் மத்திய மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் ராஜேந்திரன் என்பவர் இந்த சுவரொட்டிகளை ஒட்டியுள்ளார். அதில் ஓ.பன்னீர்செல்வதை தர குறைவாக பேசியும், தண்ணீர் பாட்டிலை வீசியும் பொதுக்குழு கூட்டத்தில் குந்தகம் ஏற்படுத்தியவர்களை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. அதிமுக தொண்டர்களின் சொத்தான தலைமை கழகத்தை சூறையாடியவர்கள் என்றும் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது ராஜேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.

ராமநாதபுரத்தில் ஒட்டப்பட்டுள்ள இந்த சுவரொட்டிகளால் பரபரப்பு நிலவுகிறது. இதேபோன்று சங்கரன்கோவில் அருகே கலப்பாக்குளம் கிராமத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள், எடப்பாடி பழனிச்சாமியின் செயல்பாட்டை கண்டித்து அவரது உருவ பொம்மையை எரித்து எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழ்நாடு முழுவதும் அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரத்தால் பன்னீர்செல்வம், பழனிசாமி ஆதரவாளர்கள் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. அதிமுகவின் தொண்டர்கள் இருதரப்பினரும், ஆதரவு, எதிர்ப்பு நிலைப்பாடுகளை ஆங்காங்கே சுவரொட்டிகளை ஒட்டி வெளிப்படுத்தி வருகின்றனர்.

Related Stories: