ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, சி.வி.சண்முகம், கே.பி. முனுசாமி உள்ளிட்டவர்களை கைது செய்யக்கோரி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரால் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. ராமநாதபுரம் மத்திய மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் ராஜேந்திரன் என்பவர் இந்த சுவரொட்டிகளை ஒட்டியுள்ளார். அதில் ஓ.பன்னீர்செல்வதை தர குறைவாக பேசியும், தண்ணீர் பாட்டிலை வீசியும் பொதுக்குழு கூட்டத்தில் குந்தகம் ஏற்படுத்தியவர்களை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. அதிமுக தொண்டர்களின் சொத்தான தலைமை கழகத்தை சூறையாடியவர்கள் என்றும் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது ராஜேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.