மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 14 ஆக உயர்வு...மண்ணில் புதைந்த மேலும் பலரை மீட்கும் பணி தீவிரம்!!

இம்பால்: மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் ராணுவ வீரர்கள் உட்பட 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தததாக அஞ்சப்படுகிறது. வடகிழக்கு மாநிலங்களில் கடந்த ஒரு மாதமாகவே கனமழை பெய்து வருகிறது. அசாம், திரிபுராவில் பெய்த மழையால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இந்த மாநிலங்களில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். அசாமில் மழை, வெள்ளத்தால் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இந்நிலையில், மணிப்பூரிலும் தற்போது பலத்த மழை பெய்து வருகிறது.

இங்குள்ள நோனி மாவட்டத்தின் துப்புல் யார்டு ரயில்வே கட்டுமான முகாம் அருகே நேற்று முன்தினம் இரவு பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி இதுவரை 20 பேர் உயிரிழந்து இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. அவர்களில் 14 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த நிலச்சரிவில் பிராந்திய ராணுவ வீரர்கள், தொழிலாளர்கள் உட்பட 70 பேர் சிக்கி இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.  அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. நிலச்சரிவின்போது ராட்சத பாறைகள் உருண்டு, இஜெய் ஆற்றில் விழுந்ததால் ஏராளமானோர் இதில் சிக்கி புதைந்து இருக்கலாம் என கருதப்படுவதால் பதற்றம் நிலவுகிறது. இதனால், மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டு உள்ளன.

மேலும், நிலச்சரிவினால் சரிந்த மண், பாறைகள் இஜெய் ஆற்றில் விழுந்ததால், நீரோட்டம் தடைப்பட்டு இங்குள்ள அணை உடையும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. அணை உடைந்தால் நோனி மாவட்டத்தின் தாழ்வான பகுதிகளில் பெரும் அழிவு ஏற்படும். இதனால், அப்பகுதி மக்கள் எச்சரிக்கப்பட்டு உள்ளனர். மேலும், தேசிய நெடுஞ்சாலை 37ல் பல இடங்களில் சேதம் ஏற்பட்டு இருப்பதால், போக்குவரத்து பாதித்துள்ளது.  மீட்பு பணிகள் குறித்து ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங்கிடம் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொலைபேசியில் கேட்டறிந்தார்.

Related Stories: