நாடு முழுவதும் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு இன்று முதல் தடை

புதுடெல்லி: நாடு முழுவதும் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு இன்று முதல் தடை  விதிக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் மாசடைவதை தடுக்க பிளாஸ்டிக் பொருட்களுக்கு பல்வேறு தடைகள் மற்றும் கட்டுபாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஒருமுறை பயன்படும் பிளாஸ்டிக்குக்கு ஜூலை 1ம் தேதி முதல் நாடு முழுவதும் தடை விதிக்கப்படும் என்றும்  ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக்கை கைவிடுவதற்கு அரசாங்கம் போதுமான அவகாசம் அளித்துள்ளது என்றும் ஒன்றிய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் அண்மையில் அறிவித்தார்!!

சுற்றுச்சூழல் அமைச்சக அறிவிப்பின்படி, பாலிஸ்டிரீன் மற்றும் விரிவாக்கப்பட்ட பாலிஸ்டிரீன் பொருட்கள் உட்பட ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் உற்பத்தி, இறக்குமதி, இருப்பு, விநியோகம், விற்பனை மற்றும்  பயன்பாடு ஆகியவை இன்று முதல் தடை செய்யப்படுகிறது.பலூன்களுக்கான பிளாஸ்டிக் குச்சிகள், பிளாஸ்டிக் குச்சிகள் கொண்ட காதணிகள், ஐஸ்கிரீம் குச்சிகள், மிட்டாய் குச்சிகள், பிளாஸ்டிக் கப்புகள், பிளாஸ்டிக் கண்ணாடிகள், பிளாஸ்டிக் அல்லது பிவிசி 100 மைக்ரானுக்கு குறைவான பேனர்கள், பிளாஸ்டிக் ஸ்பூன்ஸ், போர்க்ஸ், கத்திகள், ஸ்ட்ராக்கள், கட்லரி மற்றும் இனிப்புப் பெட்டிகள், சிகரெட் பாக்கெட்டுகள் மற்றும் அழைப்பிதழ் அட்டைகளில் சுற்றப்படும் பிளாஸ்டிக் பிலிம்கள் ஆகியவை தடை செய்யப்பட்ட பொருட்களாகும். மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்வதாக கண்டறியப்பட்டால் வணிக உரிமங்கள் ரத்து செய்யப்படும். தடையை மீறினால் சுற்றுசூழல் பாதுகாப்பு சட்டத்தின் கேள் 5 ஆண்டுகள் சிறை அல்லது ரூ.1 லட்சம் அபராதம் வரை விதிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: