10 ஆண்டு சரிவை சீர் செய்து கொண்டிருக்கிறோம் எதிர்காலத்தை ஒளிமயமாக்க திமுக அரசு ஓயாமல் உழைக்கும்; ராணிப்பேட்டையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி

சென்னை: கடந்த 10 ஆண்டு காலமாக ஏற்பட்டுள்ள சரிவை திமுக அரசு சீர் செய்து கொண்டிருக்கிறது. என் சக்தியையும் மீறி உங்களுக்காக உழைப்பேன்என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதிபட கூறினார். ராணிப்ேபட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடந்தது. கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தலைமை தாங்கினார். அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, எம்பிக்கள் ெஜகத்ரட்சகன், கதிர்ஆனந்த் முன்னிலை வகித்தனர். கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வரவேற்றார்.  ராணிப்பேட்டை பாரதி நகரில் ₹118.40 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள கலெக்டர் அலுவலகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். அதனைத்தொடர்ந்து, அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார்.

மாற்றுத்திறன் குழந்தைகள் பங்கேற்ற நடன நிகழ்ச்சியை கண்டு ரசித்தார்.  தொடர்ந்து, முதல்வர் ராணிப்பேட்டை மாவட்டத்தில் ₹150 கோடியே 58 லட்சத்து 91 ஆயிரம் மதிப்பிலான முடிவுற்ற திட்டப் பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். மேலும், ₹10.25 கோடியில் ராணிப்பேட்டை புதிய பஸ்நிலையம் அமைக்க அடிக்கல் உள்பட ₹22 கோடியே 19 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பிலான 5 பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். அப்போது, முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: திமுக தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டதில் ஏறக்குறைய 70 சதவீதம், 80  சதவீதம் நாம் நிறைவேற்றி இருக்கிறோம்.  நான் இதை சட்டமன்றத்திலும் சொல்லியிருக்கிறேன், மக்கள் மன்றத்திலும் சொல்லியிருக்கிறேன், எந்தெந்த வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றி இருக்கிறோம் என்பதை பட்டியல் போட்டு, உங்களிடத்தில் சொல்லியிருக்கிறேன்.

புள்ளி விவரத்தோடு தான் சொல்லியிருக்கிறேன். ஆக, நீங்கள் பலன்பெற்று வருகிறீர்கள். திமுக ஆட்சி கடந்த ஆண்டு பொறுப்புக்கு வந்தபோது, பள்ளிக்கல்வித் துறை சார்பில், கடந்த ஆட்சிக் காலத்தில்  அப்போதைய முதலமைச்சர்களின் படத்தை அச்சிட்டு தயாரிக்கப்பட்ட பைகள்  இன்னமும் மீதம் இருக்கிறது. அதை பயன்படுத்த வேண்டாம் என்று அமைச்சர்,  அதிகாரிகள் என்னிடத்தில் வந்து சொன்னார்கள். நான் உடனே சொன்னேன். அதைப்  பயன்படுத்தாமல் போனால், ₹17 கோடி அரசுக்கு வீண் இழப்பீடு ஏற்படும், செலவு  ஏற்படும், பணம் வீணாகும், “பரவாயில்லை, முன்னாள் முதலமைச்சர்கள் படமே  இருக்கட்டும்” என்று சொல்லி, அந்த பைகளைக் கொடுக்கச் சொன்னவன்தான் இந்த  ஸ்டாலின் என்பதை மக்களாகிய நீங்கள் அறிவீர்கள்.விளம்பரங்கள் எனக்கு  தேவையில்லை.

ஏற்கனவே கிடைத்த புகழையும் பெருமையையும் காலமெல்லாம் கரையாமல்  காப்பாற்றினால் போதும் என்று நினைப்பவன் நான். இந்தியா  என்பது மாநிலங்களின் ஒன்றியம் என்று சொன்னால் போதும். என் குரல்  நினைவுக்கு வரும் உங்களுக்கு. 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டை இந்தியா  முழுமைக்கும் கொண்டு சேர்த்தது யார், அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர்  என்பது, யார் ஆட்சிக் காலத்தில் அமலானது என்று கேட்டால், என் முகம் தான்  நினைவுக்கு வரும். தமிழ்நாட்டின் அம்பேத்கரான பெரியாருக்கும்,  இந்தியாவின் பெரியாரான அம்பேத்கருக்கும், அவர்களது பிறந்தநாளை சமூகநீதி  நாளாகவும், சமத்துவ நாளாகவும் அறிவித்தது யார் என்றால், என் பெயர் தான்  நினைவுக்கு வரும்.

கையில் காசு இல்லை என்றாலும் போகவேண்டிய இடத்திற்கு  போய்ச் சேரலாம் என்ற நம்பிக்கையுடன், பேருந்துகளில் ஏறும் பெண்களுக்கு  எந்நாளும் என் முகம்தான் நினைவுக்கு வரும். நான் என்று சொல்வது தனிப்பட்ட  இந்த ஸ்டாலின் என்று நீங்கள் நினைக்க வேண்டாம். நாம் அனைவரும் சேர்ந்த  கூட்டுக்கலவைதான் நான். இந்த ஆட்சியானது கடந்த  பத்தாண்டு காலமாக, தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள சரிவைச் சீர் செய்து  கொண்டிருக்கிறது. பள்ளத்தை நிரப்பிவருகிறது. துன்பங்களை போக்கி  வருகிறது. தொய்வைத் துடைத்து வருகிறது. என் சக்தியையும் மீறி உங்களுக்காக  உழைப்பேன். தமிழகத்தின் எதிர்காலத்தை ஒளிமயமாக்க உதயசூரியன் அரசு ஓயாமல்  உழைக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: