தமிழ்நாடு நாள் விழா; பள்ளி மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை போட்டிகள்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் 6ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட உள்ளது. மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்க கட்டுரைப் போட்டிக்கு 25 மாணவர்கள், பேச்சுப் போட்டிக்கு 25 மாணவர்கள் தேர்வு செய்து  திருவள்ளூர் மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநருக்கு பெயர்ப் பட்டியலை ஜூலை 5ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

தமிழ்நாடு உருவான வரலாறு, மொழிவாரி மாகாணமும் தமிழ்நாட்டில் நடைபெற்ற போராட்டங்களும், தமிழ்நாட்டிற்காக உயிர் கொடுத்த தியாகிகள், பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய தமிழ்நாடு, சங்கரலிங்கனாரின் உயிர் தியாகம், மொழிவாரி மாநிலம் உருவாக்கத்தில் தந்தை பெரியார், மொழிவாரி மாநிலம் உருவாக்கத்தில் மபொசி, சட்டமன்றத்தில் ஒலித்த தமிழ்நாடு, எல்லைப் போர்த் தியாகிகள், முத்தமிழறிஞர் கலைஞர் உருவாக்கிய நவீன தமிழ்நாடு போன்ற தலைப்புகளில் போட்டிகள் நடத்தப்படவுள்ளன.

திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழ்நாடு நாள் விழாவினை முன்னிட்டு ஜூலை 8ம் தேதி காலை 10 மணியளவில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகள் திருவள்ளூர், மணவாள நகர், கே.இ.நடேச செட்டியார் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறவுள்ளன.

கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகளில் வெற்றிப்பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ.10 ஆயிரம், 2 ஆம் பரிசாக ரூ.7 ஆயிரம், 3 ஆம் பரிசாக ரூ.5 ஆயிரம் வழங்கப்பட உள்ளது. கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவியர்கள் தங்கள் பள்ளி தலைமை ஆசியரியரிடமிருந்து ஆளறிச்சான்று பெற்று போட்டியில் பங்கேற்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

Related Stories: