திருவள்ளூர் மருத்துவ கல்லூரியில் யாருக்கும் கொரோனா இல்லை; கல்லூரி முதல்வர் தகவல்

திருவள்ளூர்: திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவர்கள் யாருக்கும் கொரோனா பாதிப்பு கிடையாது என்று அக்கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவ, மாணவிகள் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக தகவல் பரவியது. இது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் அரசி வத்சன் கூறியதாவது; திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர்கள் மிகச் சிறப்பாக படித்து வருகிறார்கள்.

எந்த ஒரு மாணவர்களுக்கும் கொரோனா நோய் தொற்றோ, கொரோனா நோய் அறிகுறிகளோ இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். தமிழக அரசின் கொரோனா வழிகாட்டுதலின்படி மாணவர்கள் பின்பற்றவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் அனைவரும் மிகவும் உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இவ்வாறு கூறினார்.

Related Stories: