கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை

சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் இன்று தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில் கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்வுகள் அளிக்கப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன்படி நேற்று சென்னையில் 909 பேருக்கும், செங்கல்பட்டு 352, காஞ்சிபுரம் 71, திருவள்ளூர் மாவட்டத்தில் 100 பேருக்கு என தமிழகம் முழுவதும் 2,069 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்தாலும் உயிரிழப்புகள் மட்டும் இதுவரை ஏற்படவில்லை. எனவே கொரோனா பாதிப்பை தடுக்கும் வகையிலும், தடுப்பூசி முகாம்களை தொடர்ந்து  நடத்திடவும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமை செயலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகள், டாக்டர்கள், முக்கிய அதிகாரிகள் பலர் பங்கேற்கின்றனர். கூடுதல் கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பாக அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசிப்பார் என்றும் கூறப்படுகிறது.

Related Stories: