டிஎஸ்-இஓ புவி கண்காணிப்பு செயற்கைகோளுடன் பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது

சென்னை: சிங்கப்பூர் நாட்டின் வணிக ரீதியான 3 செயற்கைக்கோள்களை பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட் மூலம் இஸ்ரோ நேற்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இஸ்ரோ பி.எஸ்.எல்.வி சி- 53 ராக்கெட் மூலம் சிங்கப்பூர் நாட்டின் 3 செயற்கைக்கோள்கள் ஜூன் 30ம் தேதி விண்ணில் ஏவப்படும் என  அறிவித்தது. அதன்படி, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பிஎஸ் எல்வி சி 53 ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்கான 25 மணி நேர கவுண்டவுன் நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு தொடங்கியது.

இந்தநிலையில், சதீஸ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் 2வது ஏவுதளத்தில் இருந்து திட்டமிட்டபடி நேற்று மாலை 6 மணி 2 நிமிடத்தில் பி.எஸ்.எல்.வி. சி-53 ராக்கெட்டை இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. ராக்கெட்டில் வணிக ரீதியாக சிங்கப்பூர் நாட்டை சேர்ந்த 365 கிலோ எடை கொண்ட டிஎஸ்-இஓ செயற்கைக்கோள், 155 கிலோ எடை கொண்ட நியூசர் செயற்கைக்கோள் மற்றும் 2.8 கிலோ எடை கொண்ட ஸ்கூப் - 1 செயற்கைகோள் என 3 செயற்கைக்கோள்களும்  விண்ணில் ஏவப்பட்டது. பூமியில் இருந்து ராக்கெட் விண்ணில் ஏவப்பட்ட 18 நிமிடம் 10 வினாடிகளில் 570 கி.மீ தூரத்தில் முதன்மை செயற்கைக்கோளான டிஸ்-இஓ செயற்கைக்கோள் திட்டமிட்ட அதன் புவிவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.

இதைத்தொடர்ந்து, நியூசர் செயற்கைக்கோள் 19 நிமிடம் 20 வினாடிகளிலும், ஸ்கூப் 1 செயற்கைக்கோள் 19 நிமிடம் 22 வினாடிகளில் அடுத்தடுத்து அதன் இலக்கில் திட்டமிட்டபடி நிலைநிறுத்தப்பட்டது. ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதையடுத்து இஸ்ரோ தலைவர் சோம்நாத் சக விஞ்ஞானிகளுடன் கைகுலுக்கி மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டார். டிஎஸ்-இஓ செயற்கைக்கோள் அதிக தெளிவுதிறன் மற்றும் ஒரே நேரத்தில் பல கோணங்களில் பூமியை வண்ண படம் எடுக்கும் வசதி கொண்டது. இது பேரிடர் மீட்பு, பேரிடர் மீட்பிற்கு தேவைப்படும் மனித வளங்களை கண்டறிவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும். இதேபோல், நியூசர் செயற்கைகோள் பல்வேறு காலநிலைகளில் பூமியை துல்லியமாக படம் எடுக்கவும், ஸ்கூப் 1 செயற்கைகோள் கல்வி பயன்பாட்டிற்கும் உதவும். இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து ஏவப்படும் பி.எஸ்.எல்.வி. ரகத்தில் 16வது ராக்கெட் இதுவாகும். 

Related Stories: