அதிமுகவை செயல்படாத நிலைக்கு கொண்டு சென்று விட்டு ஒருங்கிணைப்பாளர் என்ற உணர்வில் நீங்கள் எழுதிய கடிதம் செல்லாது

சென்னை: அதிமுகவை செயல்படாத நிலைக்கு கொண்டு செல்வதற்கான அனைத்து பணிகளையும்  செய்துவிட்டு, தற்போது அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற உணர்வில் எனக்கு  எழுதியுள்ள கடிதம் ஏற்புடையதாக இல்லை என்று ஓபிஎஸ்சுக்கு எடப்பாடி பதிலடி  கொடுத்துள்ளார். அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்னையால் ஓபிஎஸ் - இபிஎஸ் இடையே கடந்த 3 வாரமாக உச்சக்கட்ட போர் நடைபெற்று வருகிறது. ஓபிஎஸ் வகித்து வந்த ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகி விட்டதாக எடப்பாடி அணியினர் அதிரடியாக அறிவித்தனர்.

தற்போது, எடப்பாடி பழனிசாமி அதிமுக தலைமை நிலைய செயலாளராக செயல்பட்டு வருவதாகவும், ஓபிஎஸ் அதிமுகவின் பொருளாளராக மட்டுமே நீடிக்கிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எடப்பாடியை பொதுச்செயலாளராக நியமிக்க வருகிற 11ம் தேதி அதிமுக பொதுக்குழு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில், பொருளாளர் பதவியில் இருந்து ஓபிஎஸ்சை நீக்கவும் எடப்பாடி அணியினர் காய் நகர்த்தி வருகிறார்கள். இதை தடுத்து நிறுத்த ஓ.பன்னீர்செல்வம், இந்திய தலைமை தேர்தல் ஆணையம் மற்றும் நீதிமன்ற உதவியை நாடியுள்ளார். இதனால், அறிவித்தபடி அதிமுக பொதுக்குழு 11ம் தேதி நடைபெறுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இந்த நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரில் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நேற்று முன்தினம் (29ம் தேதி) ஒரு கடிதம் எழுதி இருந்தார். அதில், ‘‘உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவியிடங்களை நிரப்புவதற்கான தேர்தல் நடைபெறுகிறது. அதிமுக வேட்பாளர்கள் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட ஏதுவாக படிவம் ஏ மற்றும் பி ஆகியவற்றை எனக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்’’ என்று கூறி இருந்தார்.

இந்த கடிதத்துக்கு பதில் அளித்து எடப்பாடி பழனிசாமி நேற்று (30ம் தேதி) ஓ.பன்னீர்செல்வத்துக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது: அதிமுக பொருளாளர் அண்ணன் ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு வணக்கம். தங்களின் 29.6.2022ம் தேதியிட்ட கடிதம் பத்திரிகைகளின் வாயிலாக தெரிந்து கொண்டேன். பின்னர், மகாலிங்கம் (அதிமுக தலைமை அலுவலக மேலாளர்) வழியாக பெறப்பட்டது. கடந்த 23ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில், 1.12.2021 அன்று நடைபெற்ற அதிமுக செயற்குழுவால் கொண்டுவரப்பட்ட கட்சியின் சட்ட திட்ட திருத்தங்கள் அங்கீகரிக்கப்படவில்லை. ஆதலால், அந்த சட்ட திட்ட திருத்தங்கள் காலாவதி ஆகிவிட்டது. எனவே, அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற உணர்வில் தாங்கள் எழுதியுள்ள கடிதம் செல்லத்தக்கதல்ல.

மேலும், உள்ளாட்சி அமைப்புகளில் தற்போது காலியாக இருக்கும் பதவிகளுக்கு நடைபெற உள்ள தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு கடைசி நாள் 27.6.2022 அன்று முடிவுற்றது. இந்த நிலையில், இத்தனை நாட்கள் பொறுத்திருந்து, அதிமுகவின் வேட்பாளர்களை அதிகாரப்பூர்வமாக அறிவிக்காத நிலையிலும், 27.6.2022 அன்று கூட்டப்பட்ட தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்திற்கு தாங்கள் உட்பட அனைவருக்கும் முறையாக தகவல் தெரிவிக்கப்பட்டு, மொத்தம் உள்ள 74 தலைமை கழக நிர்வாகிகளில் 65 பேர் கலந்து கொண்டனர். 4 பேர் உடல்நிலை சரியில்லை என்று தகவல் தெரிவித்திருந்தனர். தாங்கள் அந்த கூட்டத்தை புறக்கணித்த நிலையில், தற்போதைய தங்களின் இந்த கடிதம் ஏற்புடையதாக இல்லை.

அதேபோல், நாம் இருவரும் கூட்டாக அழைப்பு விடுத்த அதிமுகவின் பொதுக்குழுவை நடத்தவிடாமல் தடுத்து நிறுத்துவதற்காக தாங்கள், ஆவடி காவல் ஆணையருக்கு கடிதம் மூலம் புகார் அளித்தும், நீதிமன்றங்களின் மூலம் வழக்குகளை தாக்கல் செய்தும், அதிமுகவை செயல்படாத நிலைக்கு கொண்டு செல்வற்கான அனைத்து பணிகளையும் செய்துவிட்டு, தற்போது இப்படி ஒரு கடிதத்தை எனக்கு அனுப்புவது ஏற்புடையதாக இல்லை என்பதை தெரிவித்து கொள்கிறேன்.

இப்படிக்கு அதிமுக தலைமை நிலைய செயலாளர் எடப்பாடி பழனிசாமி. இவ்வாறு கடிதத்தில் கூறி இருக்கிறார்.

ஓபிஎஸ்சுக்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி

* அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்னையால் ஓபிஎஸ் - இபிஎஸ் இடையே கடந்த 3 வாரமாக உச்சக்கட்ட போர் நடந்து வருகிறது.

* எடப்பாடி அதிமுக தலைமை நிலைய செயலாளராக செயல்பட்டு வருவதாகவும், ஓபிஎஸ் பொருளாளராக மட்டுமே நீடிக்கிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

* எடப்பாடியை பொதுச்செயலாளராக நியமிக்க வருகிற 11ம் தேதி அதிமுக பொதுக்குழு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: