தி.மலை அண்ணாமலையார் கோயிலுக்கு வரும் பக்தர்கள் முகக்கவசம் அணிய வேண்டும்; கோயில் இணை ஆணையர் வேண்டுகோள்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில், கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே, அண்ணாமலையார் கோயிலுக்கு வரும் பக்தர்கள் முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் கடந்த சில வாரங்களாக படிப்படியாக உயர்ந்து வருகிறது. தற்போது சுமார் 9 ஆயிரம் பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

எனவே, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தனிகவனம் செலுத்த வேண்டும், பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிப்பதை நடைமுறைப்படுத்த வேண்டும் என அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில், கடந்த 1ம்தேதி கொரோனா தொற்று பரவலால் பாதிக்கப்பட்டோர் இல்லாத நிலையில் நேற்றைய நிலவரப்படி 55ஆக அதிகரித்திருக்கிறது.

இந்நிலையில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி, வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். எனவே, கோயிலுக்கு வரும் பக்தர்கள் முகக்கவசம் அணியவேண்டும், தொற்று பரவலை தடுக்க கோயில் நிர்வாகம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு பக்தர்கள் ஒத்துழைக்க வேண்டும் என கோயில் இணை ஆணையர் கே.பி.அசோக்குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.

 கோயிலின் பிரதான நுழைவு வாயில்களில் ஏற்கனவே இருந்த நடைமுறைப்படி கிருமி நாசினியால் கைகளை தூய்மை செய்தல், வெப்ப பரிசோதனைக்கு உட்படுத்துதல் போன்றவை நடைமுறைப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

Related Stories: