திருப்பாச்சேத்தி அருகே பஸ்சை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டம்

திருப்புவனம்: திருப்பாச்சேத்தி அருகே பஸ்சை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகே உள்ளது மழவராயன்னேந்தல் கிராமம். இங்கு 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமத்திற்கு மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்டில் இருந்து 1990ல் இருந்து பஸ் இயக்கப்பட்டு வருகிறது. காலை 7.30, 10.30, பிற்பகல் 2.30, மாலை 4.30, இரவு 7.30, இரவு 9.30 மணி என 6 முறை பஸ் இயக்கப்பட்டு வந்தது.

தற்போது காலையில் ஒரு முறை, மாலையில் ஒரு முறை என நாள் ஒன்றுக்கு இரண்டு முறை மட்டுமே பஸ் இயக்கப்படுகிறது. இதனால் மக்கள், மாணவ-மாணவிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். முன்பு போல் நாள் ஒன்றுக்கு 6 முறை அரசு பஸ்சை இயக்க வேண்டும் என கிராம மக்கள் பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை இல்லை. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் 100க்கும் மேற்பட்டோர் இன்று காலை திரண்டனர்.

காலை 7.30 மணிக்கு மழவராயன்னேந்தல் கிராமத்திற்கு அரசு டவுன் பஸ்சை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்து திருப்பாச்சேத்தி எஸ்ஐ கருப்பையா, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். டெப்போவில் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டனர். 1 மணிநேரம் நடந்த போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: