கொச்சி அருகே நடுக்கடலில் தத்தளித்த 5 மீனவர்கள் மீட்பு

கொச்சி: கேரளாவை சேர்ந்த மீனவர்கள் 6 பேர் கடந்த 28ம் தேதி மீன்பிடிக்க படகில் சென்றனர். கொச்சியில் இருந்து வடமேற்கே 40 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது திடீரென கடல் சீற்றம் ஏற்பட்டது. இதில் அவர்களது மீன்பிடி படகு கவிழ்ந்தது. 6 மீனவர்களுடம் கடலில் தத்தளித்தனர். யாராவது உதவிக்கு வரமாட்டார்களா என எதிர்பார்த்து உயிருக்கு போராடினர். இந்நிலையில் அந்த பகுதி வழியாக சென்ற ஒரு சரக்கு கப்பல், மீனவர்கள் குறித்த தகவலை கொச்சியில் உள்ள கடல்சார் மீட்பு துணை மையத்திற்கு தெரிவித்தது.

இதையடுத்து விரைந்து செயல்பட்ட கடலோர காவல்படை வீரர்கள், ரோந்து கப்பல் ஆர்யமான் மூலம் அப்பகுதிக்கு சென்றனர். தொடர்ந்து கூட்டு நடவடிக்கை மூலம் 5 மீனவர்கள் மீட்கப்பட்டனர். எனினும் அவர்களை உடனடியாக அங்கிருந்து அழைத்து செல்வதில் தாமதமானதால், கடலோர காவல்படையின் நவீன ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டது. மீனவர்கள் ஒவ்வொருவராக கப்பலில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக கொச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மாயமான ஒரு மீனவரை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெறுகிறது.

Related Stories: