கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும்போது உயிரிழந்த சென்னை கழிவு நீரகற்று வாரிய ஒப்பந்த ஊழியரின் குடும்பத்தினருக்கு ரூ.15லட்சம் நிவாரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும்போது உயிரிழந்த சென்னை கழிவு நீரகற்று வாரிய ஒப்பந்த ஊழியரின் குடும்பத்தினருக்கு ரூ.15லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரிய ஒப்பந்த தொழிலாளர் திரு.வே.ரவிகுமார் அவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணத் தொகையாக ரூ.15 லட்சம் வழங்கிட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் 28.06.2022 அன்று காலை முதல் ஜெட் ராடிங் மற்றும் சூப்பர் சக்கர் இயந்திரத்தைப் பயன்படுத்தி மாதவரம் முத்துமாரியம்மன் கோயில் தெருவில் கழிவுநீர் அடைப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது, பிற்பகல் சுமார் 2.30 மணியளவில் ஒப்பந்தத் தொழிலாளர் திரு.நெல்சன் என்கிற கட்டாரி (வயது - சுமார் 26), இயந்திர துளையில் ஏதேனும் கல்/துணி அடைக்கப்பட்டிருக்கிறதா என்று சாலையில் நின்று கவனித்தபோது, இயந்திர துளையில் எதிர்பாராத விதமாக தவறி விழுந்து விட்டார். அவரைக் காப்பாற்ற முயன்ற ஒப்பந்த தொழிலாளர் திரு.வே.ரவிகுமார் (வயது - சுமார் 35) என்பவரும் இயந்திர துளையில் விழுந்து விட்டார். உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இருவரும் உயிருடன் மீட்கப்பட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் ஒப்பந்தத் தொழிலாளர், நெல்சன் என்கிற கட்டாரி என்பவர் சிகிச்சை பலனின்றி 28.06.2022 அன்று இறந்துவிட்டார்.

உயிரிழந்த ஒப்பந்த தொழிலாளர் நெல்சன் என்கிற கட்டாரி அவர்களது குடும்பத்தினருக்கு இழப்பீடாக 07.06.2022 நாளிட்ட நகர் நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் அரசாணை எண்.83-இன்படி ரூ.15 இலட்சம் வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை பெற்றுவந்த ஒப்பந்த தொழிலாளர் திரு.வே.ரவிகுமார் சிகிச்சை பலனின்றி  30.06.2022 அன்று காலை உயிரிழந்தார். உயிரிழந்த ஒப்பந்த தொழிலாளர் திரு.வே.ரவிகுமார் அவர்களது குடும்பத்தினருக்கு இழப்பீடாக 07.06.2022 தேதியிட்ட நகர் நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் அரசாணை எண்.83-இன்படி ரூ.15 இலட்சம் வழங்கப்படும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டது. 

Related Stories: