பெரியகுளம்: குள்ளப்புரம் பகுதியில் இடிந்த நிலையில் உள்ள அரசு கால்நடை மருத்துவமனை கட்டிடத்தை அகற்றி புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என கால்நடை வளர்ப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பெரியகுளம் அருகே உள்ள குள்ளப்புரம் பகுதியில் அதிக அளவில் ஆடு, மாடு மற்றும் நாட்டுக்கோழி வளர்ப்பில் அப்பகுதி மக்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் அரசு அந்த பகுதியில் கால்நடை மருத்துவமனை கட்டி செயல்பட்டு வந்தது. இந்நிலையில் அந்த கால்நடை மருத்துவமனை உட்பகுதியிலும், வெளிப் பகுதியில் பாதி இடிந்த நிலையில் அந்தரத்தில் தொங்கியவாரு உள்ளது. மேலும் கால்நடை மருத்துவமனை இடிந்து விழும் நிலையில் உள்ளதால் கால்நடை மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் இடிந்து விழும் நிலையில் உள்ள கட்டிடத்தில் பணி செய்வதில் தயக்கம் காட்டி வருகின்றனர்.