திருவனந்தபுரம்: சாட்சிகளை மிரட்டியது உள்பட ஜாமீன் நிபந்தனைகளை மீறியதால், நடிகர் திலீப்பின் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று கூறி குற்றப்பிரிவு போலீஸ் தாக்கல் செய்த மனுவை, எர்ணாகுளம் விசாரணை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.பிரபல மலையாள நடிகையை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த விவகாரத்தில் சதி திட்டம் தீட்டியதாக கூறி, திலீப் கைது செய்யப்பட்டார். கடந்த 85 நாட்கள் சிறைவாசத்துக்கு பிறகு நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். ‘சாட்சிகளை மிரட்டவோ, கலைக்கவோ கூடாது. ஆதாரங்களை அழிக்கக்கூடாது’ என்பது உள்பட சில நிபந்தனைகளை நீதிமன்றம் விதித்திருந்தது.
இந்நிலையில், திலீப் சாட்சிகளை கலைத்துவிட்டதாகவும், வழக்கு தொடர்பான சில ஆவணங்களை அழித்தது கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாலும் அவரது ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று கூறி, எர்ணாகுளம் விசாரணை நீதிமன்றத்தில் குற்றப்பிரிவு போலீசார் மனு தாக்கல் செய்தனர்.