திருவொற்றியூர்: மணலி புதுநகர் அருகே ரூ.15 கோடி மதிப்பீட்டில் கொசஸ்தலை ஆறு சீரமைக்கும் பணியை நீர்வளத்துறை செயலர் சந்தீப் சக்சேனா அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார். கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்த கனமழையின்போது பெருக்கெடுத்து வந்த கொசஸ்தலை ஆற்று உபரி நீர் மணலி புதுநகர் அருகே வெள்ளிவாயல், விச்சூர், கணபதி நகர், லட்சுமி நகர், வடிவுடை அம்மன் நகர் சடையங்குப்பம், இருளர் காலனி போன்ற உள்ளிட்ட பகுதிகளில் சூழ்ந்து குடியிருப்புகளிலும் புகுந்தது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டதோடு உடமைகளும் சேதமானது. இதனைத்தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ள நீர் சூழ்ந்த இந்த பகுதிகளை அடுத்தடுத்து இரண்டு முறை பார்வையிட்டு உபரி நீரை அகற்றவும், நிவாரண பணிகளை மேற்கொள்ளவும் உத்தரவிட்டார். மேலும் இனி வரும் காலங்களில் உபரி நீர் குடியிருப்புகளை சூழ்ந்து விடாமல் இருக்க கொசஸ்தலை ஆற்றின் கரையை பலப்படுத்தி தூர்வாரி சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.