ஏடிஎம் இயந்திரத்தில் தண்ணீர் பவுடரை கொட்டிய மர்ம நபர்: சிசிடிவி காட்சிகளைக் கொண்டு போலீசார் விசாரணை

திருவள்ளூர்:  ஏடிஎம் இயந்திரத்தில் தண்ணீர் பவுடரை கொட்டிய மர்ம நபரை  போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவம்  திருவாலங்காடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  திருவள்ளூர் மாவட்டம்  திருவாலங்காடு சன்னதி தெருவில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுடன் இந்தியன் வங்கி இயங்கி வருகிறது. இந்த வங்கி கட்டடத்தில் ஏடிஎம் மையம் அமைந்துள்ளது. இங்கு டெபாசிட் செய்யவும்  பாஸ் புக் பதிவு செய்யும் இயந்திரம்  வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த ஐந்து நாட்களாக இயந்திரம் வேலை செய்யாததால் வாடிக்கையாளர்கள் புகார் அளித்தனர். இதையடுத்து வங்கி ஊழியர்கள் இயந்திரத்தை பழுது பார்த்தபோது அதில் தண்ணீர் மற்றும் பவுடர் உள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.  இதற்கான காரணம் யார் என்பது குறித்து கண்டறிய ஏடிஎம் மையத்தில் உள்ள சிசிடிவியை ஆய்வு  செய்தனர். அதில் கடந்த 25ம் தேதி   காலை 10.30 மணியளவில் வங்கி ஏடிஎம் மையத்திற்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர் பிஎன்ஏ மெஷினில் தண்ணீர் ஊற்றியும், பவுடர் தூவி விட்டும் சென்றுள்ளது பதிவாகி இருந்தது.

 இதையடுத்து வங்கி மேலாளர் பாரி வங்கி பிஎன்ஏ இயந்திரத்தை சேதப்படுத்தி சென்ற மர்ம நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருவாலங்காடு போலீசில் புகார் அளித்தார். சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது நீல நிற சட்டை அணிந்த நபர் ஒருவர் தண்ணீர் பாட்டிலில் இருந்து தண்ணீரை இயந்திரத்திற்குள் ஊற்றுவதும் பவுடரை தெளிப்பதும் தெரிய வந்துள்ளது. இதையடுத்து திருவாலங்காடு போலீசார்  மர்ம நபரை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பணம் திருட வந்து கிடைக்காத ஆத்திரத்தில் இயந்திரத்தில் தண்ணீர் ஊற்றி பவுடர் போட்டுவிட்டு சென்றாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

Related Stories: