சென்னை: அரசினர் ஐடிஐ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை ஆரம்பித்துள்ளதாக சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை கலெக்டர் அமிர்த ஜோதி வெளியிட்ட அறிக்கை: சென்னை மாவட்டத்தில் உள்ள கிண்டி, கிண்டி (மகளிர்), திருவான்மியூர், வடசென்னை மற்றும் ஆர்.கேநகர் ஆகிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் உள்ள பல்வேறு பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத தொழிற்பிரிவுகளில் பயிற்சி பெறுவதற்கு தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
அதற்கான தகுதிகள்: கல்வித் தகுதி 8ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு தேர்ச்சி, ஆண்களுக்கு வயது உச்ச வரம்பு 40, பெண்களுக்கு வயது உச்ச வரம்பு இல்லை. பயிற்சி காலத்தில் வழங்கப்படும் சலுகைகள்: கட்டணமில்லா பயிற்சி உதவித்தொகை மாதந்தோறும் ரூ.750, பயிற்சியில் சேரும் அனைவருக்கும் விலையில்லா சீருடை, பாடப்புத்தகம், சைக்கிள், காலணி ஆகியவை வழங்கப்படும். பயிற்சியின்போது இன்டர்ன்ஷிப் டிரையினிங் மற்றும் இன்பிளான்ட் டிரையினிங் மூலம் தொழிற்சாலைகளில் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி முடித்தவுடன் வேலைவாய்ப்பு அளிக்கப்படும். ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 20.7.2022. விண்ணப்பிப்பதற்கான இணையதள முகவரி www.skilltraining.tn.gov.in. தொடர்புக்கு 044 - 29813781 என்ற எண்ணை அழைக்கலாம். மேலும், அருகாமையில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் செயல்படும் சேர்க்கை உதவி மையத்தை அணுகியும் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.