அண்ணாநகர்: சென்னை அண்ணாநகர் மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்யும் கடைகளுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்து வந்தனர். மேலும் இதை மீறி குட்கா விற்பனை செய்யும் கடைகளை கண்டறிந்து அந்த கடைகளுக்கு அபராதம் விதித்து வருவாய்த்துறை அதிகாரி மூலமாக கடைகளை சீல் வைத்தும் வருகின்றனர். இந்நிலையில், அண்ணா நகர் 8வது மண்டலத்துக்கு உட்பட்ட கடைகளில் குட்கா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் கீழ்ப்பாக்கம் பகுதியில் சோதனை செய்தனர். அப்போது, குட்கா விற்ற 7 கடைகளுக்கு அண்ணா நகர் 8வது மண்டல உதவி வருவாய்த்துறை அதிகாரி ரவிசந்திரன் மற்றும் உரிமம் ஆய்வாளர் திருநாவுக்கரசு தலைமையில் கொண்ட சுமார் 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் நேற்று அதிரடியாக சீல் வைத்தனர்.