சென்னை வந்த விமானத்தில் பெண்ணிடம் சில்மிஷம்; பேராசிரியர் கைது

சென்னை: சென்னை விமான நிலையத்துக்கு கடந்த 18ம் தேதி சவூதி அரேபியாவின் ஜெட்டா நகரில் ஒரு பயணிகள் விமானம் வந்தது. இதில் 239 பேர் பயணம் செய்தனர். அவர்களுடன் ஜெட்டா நகரில் பணிபுரியும் சென்னையை சேர்ந்த 35 வயதான பெண் பயணியும், தஞ்சாவூரை சேர்ந்த 38 வயதான கல்லூரி பேராசிரியரும் பயணம் செய்தனர். இந்நிலையில், அந்த விமானம் நடுவானில் பறந்தபோது சென்னையை சேர்ந்த பெண் எச்சரித்தும், பேராசிரியர் பலமுறை பாலியல் சில்மிஷம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, அந்த விமானம் அன்று மதியம் சென்னை விமான நிலையத்தில் இறங்கியது.

இதுகுறித்து ஏர்லைன்ஸ் நிறுவன ஊழியர்கள் உதவியுடன் அந்த பெண் சென்னை விமான நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் தஞ்சாவூரை சேர்ந்த பேராசிரியரிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது, `தூக்க கலக்கத்தில் கை தெரியாமல் பட்டுவிட்டது. என்னை மன்னியுங்கள்’ என பேராசிரியர் கூறியதை தொடர்ந்து, அந்த பெண் புகாரை வாபஸ் பெற்று சென்றுவிட்டார். இதுகுறித்து தனது வலைதள பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து தஞ்சாவூர் பேராசிரியரின் இழிவான செயலை பெண்கள் அமைப்புகள் கடுமையாக விமர்சனம் செய்தன. மேலும், கடந்த 22ம் தேதி அந்த பெண் அளித்த புகாரின்பேரில் விமான நிலைய போலீசார் தஞ்சாவூரை சேர்ந்த பேராசிரியரை கைது செய்தனர்.

Related Stories: