விவசாய மின் இணைப்பு பற்றி தகவல் தராத 3 செயற்பொறியாளருக்கு ரூ.15 ஆயிரம் அபராதம்

விழுப்புரம்:  சுயநிதி திட்ட விவசாய மின் இணைப்பு குறித்து தகவல் அளிக்காத மின் வாரிய செயற்பொறியாளர்கள் 3 பேருக்கு ரூ.15 ஆயிரம் அபராதத்தை தமிழ்நாடு தகவல் ஆணையம் விதித்துள்ளது. விழுப்புரம், விராட்டிகுப்பம் பாதையைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் தமிழ்நாடு மின் வாரியத்தில் விவசாய மின் இணைப்புக்காக சுயநிதி திட்டத்தின் கீழ் முழு பணம் செலுத்தியுள்ளார். ஆனால், மின்இணைப்பு வழங்கப்படவில்லை. மின் இணைப்பு கேட்டு 10.10.2019ம் தேதி வரை காத்திருப்பில் உள்ளவர்கள் பட்டியல் குறித்து தகவல் தெரிவிக்குமாறு, தகவல் உரிமைபெறும் சட்டத்தின் கீழ் கடந்த 15.10.2019ல் விண்ணப்பித்தார் ராஜேந்திரன். ஆனால் செஞ்சி மின் பகிர்மான வட்டத்தை தவிர மற்ற மின் பகிர்மான வட்டத்தில் உள்ள அதிகாரிகள்  தகவல்களை தரவில்லை.

இதையடுத்து, தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் விவசாயி ராஜேந்திரன் முறையீடு செய்தார். இந்த மனுவை மாநில தகவல் ஆணையர் தமிழ்குமார் விசாரித்தார். அப்போது, விழுப்புரம், திண்டிவனம், கண்டமங்கலம் மின் பகிர்மான வட்ட செயற்பொறியாளர்கள் வேண்டுமென்றே தகவல் வழங்க மறுத்துள்ளது உறுதி செய்யப்பட்டது. இதனால், தகவல் பெறும் உரிமை சட்டவிதி 19(8) (B)ன் படி இவ்வாணை கிடைக்கப்பெற்ற ஒருவாரத்திற்குள் விழுப்புரம், கண்டமங்கலம், திண்டிவனம் இயக்குதலும், பராமரித்தலும் பிரிவு மின்வாரிய செயற்பொறியாளர்கள் நஷ்டஈடாக தலா ரூ.5 ஆயிரம் வழங்க உத்தரவிடப்பட்டது. மேலும் தகவல் உரிமை பெறும் சட்ட பிரிவு 20(1)ன்படி நாள் ஒன்றுக்கு ரூ.250 வீதம் ரூ.25 ஆயிரம் அபராதம் ஏன் விதிக்கக்கூடாது என்பதற்கான விளக்கத்தை நேரில் ஆஜராகி எழுத்துப்பூர்வமாக சமர்ப்பிக்கவும் என மாநில தகவல் ஆணையர் தமிழ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: