ஊத்துக்கோட்டை அருகே குண்டும், குழியுமாக மாறிய கிராம சாலை

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அருகே காக்கவாக்கம் - தொளவேடு கிராம சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஊத்துக்கோட்டை  அருகே தொளவேடு கிராமத்தில் அரசு மற்றும் தனியார் கம்பெனி ஊழியர்கள், விவசாயிகள், பள்ளி, கல்லூரி மாணவ - மாணவிகள் என 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் வேலைக்கு செல்வதற்கும், விவசாயிகள் கோயம்பேட்டிற்கு பூ, காய்கறி போன்றவற்றை எடுத்து செல்வதற்கும், மாணவ - மாணவிகள் பள்ளிக்கு செல்வதற்கும் காக்கவாக்கம் - தொளவேடு கிராம சாலையை பயன்படுத்தி தண்டலம், பாலவாக்கம் பகுதிகளுக்கு சென்று அங்கிருந்து சென்னை, திருவள்ளூர், ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி, பொன்னேரி ஆகிய பகுதிகளுக்கு செல்வார்கள்.

இந்நிலையில், காக்கவாக்கம் - தொளவேடு கிராம சாலை குண்டும், குழியுமாகவும், தார்சாலை தற்போது மண் சாலையாக மாறி  படுமோசமாக காணப்படுகிறது. அப்பகுதி மக்கள் புதிதாக சாலை அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதன்பேரில்  கடந்த 10 வருடத்திற்கு முன்பு சாலை அமைக்கப்பட்டது.ஆனால் கடந்த சில மாதங்களாக பெய்த மழைக்கு கிராம சாலை குண்டும் குழியுமாக மாறி பெரிய அளவில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகனங்களை ஓட்ட இருசக்கரம், ஆட்டோ, டிராக்டர் போன்ற வாகன ஓட்டிகளும், பள்ளி வாகனங்களும் செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் இரவு நேரத்தில் பைக்கில் செல்பவர்கள் கீழே விழுந்து காயமும் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை அமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: