சென்னை: மூன்றாம் பாலினத்தவர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டதையடுத்து, சிறப்பு ஒதுக்கீடு வழங்கக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசு வேலைவாய்ப்பில் 3ம் பாலினத்தவர்களுக்கு சிறப்பு இட ஒதுக்கீடு வழங்கக் கோரி மூன்றாம் பாலினத்தவர் அமைப்பைச் சேர்ந்த பி.சுதா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அவரது மனுவில், 3ம் பாலினத்தவர்களுக்கு உச்ச நீதிமன்றம் அங்கீகாரம் வழங்கிய போதும், அவர்களுக்கு இதுவரை எந்த ஒரு நலத்திட்ட உதவிகளும் இட ஒதுக்கீடும் வழங்கப்படவில்லை. மூன்றாம் பாலினத்தவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ், ரேஷன்கார்டு மற்றும் கல்வி நிலையங்களில் மாணவர் சேர்க்கைக்கு வழிவகை செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.