புதுடெல்லி: நாட்டின் துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், ஆகஸ்ட் 6ம் தேதி நடைபெறும் என்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் வரும் ஆகஸ்ட் 10ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, நாட்டின் 16வது துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஆகஸ்ட் 6ம் தேதி நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் வரும் 5ம் தேதி தொடங்குகிறது. வேட்பு மனு தாக்கல் செய்ய ஜூலை 19ம் தேதி கடைசி நாளாகும். ஜூலை 20ம் தேதி வேட்பு மனு பரிசீலனை நடைபெறும். வேட்புமனுவை திரும்ப பெறுவதற்கு ஜூலை 22ம் தேதி கடைசி நாளாகும். ஆகஸ்ட் 6ம் தேதி வாக்குப்பதிவு முடிந்தவுடன் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் உடனடியாக அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. துணை ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தலில் மாநிலங்களவை எம்பி.க்கள் 233, மக்களவை எம்பி.க்கள் 543, 2 அவைகளிலும் உள்ள மொத்த நியமன எம்பி.க்கள் 14 பேர் வாக்களிக்க உள்ளனர்.