தாராபுரம்: தாராபுரத்தில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சியில் மொத்தம் 30 வார்டுகள் உள்ளன. இதில் காமராஜபுரம் 4-வது வார்டு பகுதியில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக குடிதண்ணீர் மற்றும் ஆழ்குழாய் தண்ணீர் விநியோகம் செய்யப்படவில்லை. இதுகுறித்து அப்பகுதிமக்கள் நகராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் ஆவேசமடைந்த அப்பகுதியை சேர்ந்த 60க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட ஏராளமானோர் தாராபுரம் - திருப்பூர் சாலை பூளவாடி பிரிவு சந்திப்பில் காலிக்குடங்களுடன் இன்று காலை சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.