காத்மாண்டில் பானிபூரிக்கு தடை

காத்மாண்டு: நொறுக்கு தீனிகளில் மிக முக்கியமானது பானிபூரி. சிறுவர் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்பார்கள் என்பது மிகையாகாது. சமீப காலமாக மாலை வேளைகளில் பானி பூரி கடைகளுக்கு மக்கள் படையெடுப்பது வழக்கமாக உள்ளது. சிறிய தள்ளுவண்டிகளில்கூட பலர் இந்த வியாபாரத்தை செய்கின்றனர். ஆங்காங்கே சிறிய இடங்களில் பானிப்பூரி கடை முளைத்துள்ளதை கண்கூடாக பார்ப்பதுண்டு.

இந்நிலையில், நேபாள நாட்டின் தலைநகர் காத்மாண்டுவில் பானி பூரி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

காத்மாண்டு பள்ளத்தாக்கை சுற்றியுள்ள பெரும்பாலான பகுதிகளில் ஏராளமான பானிபூரி விற்பனை கடைகள் உள்ளன. இங்கு அசுத்தமான தண்ணீர் பயன்படுத்தப்படுவதால் லலித்பூர் பகுதியில் காலரா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த 19ம் தேதி ஒருவருக்கு காலரா பாதிப்பு ஏற்பட்டது. தற்போது 12க்கும் மேற்பட்டோர் நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 8 பேர் குணமடைந்து வீடு திரும்பி விட்டார். மேலும் பாக்பஜாரில் 2 பேர் காலராவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து ஒருவாரம் பானிபூரி விற்பனைக்கு தடை விதிக்க சுகாதார அதிகாரிகள் முடிவு செய்தனர். எனினும் இதற்கு உணவு பிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பானி பூரி விற்பனைக்கு தடை விதிக்கும் முடிவு முற்றிலும் பொருத்தமற்றது என்றும், இது சிறு வணிகம் மீது நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், அதற்கு பதில் சுகாதாரமான தண்ணீரை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கலாம் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். முன்னதாக நேபாளம் முழுவதும் பாதுகாப்பற்ற குடிநீர் விநியோகம் மற்றும் சுகாதாரமற்ற சூழ்நிலைகள் காரணமாக 30,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் வரையில் 911 பேர் சுகாதார சீர்கேட்டால் இறந்துள்ளனர்.

Related Stories: