ஓபிஎஸ் போனால் அதிமுகவுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது வளர்மதி சொல்கிறார்

திருச்சி: ஓபிஎஸ் வெளியேறினால் அதிமுகவுக்கு எந்த பாதிப்பும் கிடையாது என்று முன்னாள் அமைச்சர் வளர்மதி கூறினார். முன்னாள் அமைச்சர் வளர்மதி திருச்சியில் அளித்த பேட்டி: ஜெயலலிதா இறந்த பின்னர் மீண்டும் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டபோது, எடப்பாடி பழனிசாமிதான் அதை மீட்டெடுத்தார். எந்த கொம்பனாலும் அதிமுகவை பிளவுபடுத்த முடியாது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒற்றை தலைமை இருந்தால் மட்டுமே மீண்டும் அதிமுகவை ஆட்சிக்கு கொண்டு வர முடியும்.

திமுகவை எதிர்க்கும் வல்லமை எடப்பாடி பழனிசாமிக்கு மட்டுமே இருக்கிறது. 2026-ம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைப்போம். ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோரில் யார் நல்லது செய்கிறார்களோ அவர்களுக்கு தான் பிரதமரின் ஆதரவு இருக்கும். ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டால், அவர் இன்னொரு கட்சி தொடங்கி அதிமுகவின் வாக்கு வங்கியை பிரித்து விடுவாரே என்று நிருபர்கள் கேட்டதற்கு, ‘’அவரை நீக்கினால் இன்னொரு கட்சி தொடங்க வாய்ப்பில்லை. அதனால் அதிமுகவுக்கு பாதிப்பு கிடையாது. அவர் பா.ஜனதா கட்சியில் சேர்ந்து விடுவார்’ என்று வளர்மதி கூறினார்.

Related Stories: