கொலம்பியா நாட்டில் உள்ள சிறையில் ஏற்பட்ட தீ விபத்தில் 50 கைதிகள் உடல் கருகி உயிரிழப்பு..பலருக்கு பலத்த தீக்காயம்!!

துலுவா : தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான கொலம்பியாவில் சிறையில் ஏற்பட்ட தீ விபத்தில் 50 கைதிகள் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் அந்த நாட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கொலம்பியா நாட்டின் தென்மேற்கு பகுதியில் உள்ள துலுவா நகரில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. உயிரிழந்த கைதிகளின் உறவினர்கள் சிறை வளாகத்தில் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கோபத்தின் உச்சத்தில் சிறையை அடித்து உடைத்து சூறையாடினர்.

போலீசாரையும் கைதிகளையும் பெற்றோர்கள் தாக்கினர். துலுவா நகரில் உள்ள இந்த சிறையில் உள்ள கைதிகள் நேற்று முன்தினம் திடீர் கலவரத்தில் ஈடுபட்டனர். கலவரத்தில் ஈடுபட்ட போது, சிறைக்கு தீப்பிடித்தது. மளமளவென பல்வேறு அறைகளுக்கு பரவிய தீ, சில நேரத்தில் சிறை முழுவதும் பரவியது. இதில் 180 அறைகளில் அடைக்கப்பட்டு இருந்த 1267 பேரில் 49 கைதிகள் மரணம் அடைந்தனர். மேலும் பலர் பலத்த தீக்காயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: