சென்னை: அதிமுக ஒற்றைத்தலைமை விவகாரத்தில் பன்னீர்செல்வம், பழனிசாமி ஆதரவாளர்களின் போஸ்டர் யுத்தத்திற்கு மத்தியில் சசிகலா தரப்பினரும் களம் இறங்கி இருப்பது கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதிமுகவில் உட்கட்சி பூசல் உட்சத்தில் இருப்பதை பறைசாற்றும் வகையில் கடந்த சில நாட்களாக போஸ்டர் யுத்தம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரது ஆதரவாளர்கள் தனித்தனியாக போர்க்கொடி தூக்கி வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் பன்னீர்செல்வம் மீது தண்ணீர் பாட்டில்களை வீசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.