வெளிவரும் பண்டைய தமிழர்களின் பயன்பாடு!: கீழடியில் இரு வண்ண சுடுமண் கிண்ணங்கள் கண்டெடுப்பு..!!

சிவகங்கை: கீழடியில் நடந்து வரும் 8ம் கட்ட அகழாய்வில் இரு வண்ண சுடுமண் கிண்ணங்கள் கண்டறியப்பட்டுள்ளன. சிவகங்கை மாவட்டம் கீழடியில் தமிழக தொல்லியல்துறை அகழாய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறது. கீழடியில் 8 குழிகளும், அகரம், கொந்தகையில் தலா 4 குழிகளும் தோண்டப்பட்டு நீல் வடிவ தாயக்கட்டை, பானை, உலைகலன், பானை ஓடுகள், முதுமக்கள் தாழிகள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த நிலையில், கீழடியில் புதிதாக தோண்டப்பட்ட குழியில் மேற்புறம் 10 செ.மீ. உயரத்திற்கு கருப்பு நிறமும், கீழ்புறம் சிவப்பு நிறமும் கொண்ட சுடுமண் கிண்ணங்கள் கண்டறியப்பட்டுள்ளன. புனல் போன்ற அமைப்பு கொண்ட இந்த கிண்ணங்கள் சாயம் காய்ச்சுவதற்கு பயன்படுத்தி இருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.

இதனிடையே கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட வந்தோர் 2,600 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர் நாகரீகத்தை கண்டு ஆச்சர்யமடைந்தார்கள். ஏற்கனவே கீழடியில் சாயப்பட்டறைகள் இருந்ததற்கான அடையாளம் கண்டறியப்பட்டது. ஆனால் சிவப்பு வண்ண சாய கிண்ணம் மட்டுமே கண்டறியப்பட்ட நிலையில், கீழடியில் தற்போது கருப்பு, சிவப்பு வண்ண சுடுமண்ணால் செய்யப்பட்ட கிண்ணமும் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் ஒரு கிண்ணம் மற்றும் உருண்டை வடிவிலான பானையை அகழாய்வு குழிக்குள் இருந்து வெளியே எடுக்கும் பணிகள் தொடங்கியுள்ளது.

Related Stories: