பெண்ணிடம் செயின் பறித்து தப்பிய திருடனை பிடிக்க முயன்ற மெக்கானிக் பைக் ஏற்றி கொலை: விராலிமலை அருகே கொடூரம்

விராலிமலை: புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே ராப்பூசலை சேர்ந்தவர் ரேகா (33). இவர் நேற்றுமுன்தினம் மாலை டூவீலரில் ராப்பூசலில் இருந்து கீரனூருக்கு சென்றார். இவரை பின்தொடர்ந்து பைக்கில் வந்த, திருநல்லூர் சேதுராபட்டியை சேர்ந்த சின்னராஜ்(23) என்பவர் ரேகா அணிந்திருந்த 8 பவுன் செயினை பறித்துக் கொண்டு வேகமாக தப்பினார்.  ரேகா, சுதாரித்துக் கொண்டு கூச்சலிட்டபடி திருடனை விரட்டிக்கொண்டு டூவீலரில் சென்றார். தனது உறவினர்கள் சிலருக்கு, செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார். இதையடுத்து துலுக்கம்பட்டி அருகே, சின்னராஜை மடக்கி பிடிக்க அப்பகுதியை சேர்ந்த சிலர் காத்திருந்தனர்.

இதில் அதே பகுதியை சேர்ந்த மெக்கானிக் ஆனந்த முத்துக்குமார் (47) என்பவர் சாலையின் குறுக்கே தனது பைக்கை நிறுத்தி நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியே மின்னல் வேகத்தில் பைக்கில் வந்த சின்னராஜ், ஆனந்தமுத்துகுமார் மீது ஏற்றினார். இதில் அவர் பலத்த காயமடைந்தார். இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த சின்னராஜ், பைக்கை போட்டு விட்டு தப்ப முயன்றார். அவரை அப்பகுதியினர் விரட்டி பிடித்து தர்ம அடி கொடுத்தனர். அவரை போலீசார் கைது செய்தனர். புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஆனந்த முத்துக்குமார் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை உயிரிழந்தார்.

Related Stories: