திருவள்ளூர்: சென்னையிலிருந்து ஆந்திர மாநிலம் கடப்பாவுக்கு சிமென்ட் கலவை ஏற்றி வந்த லாரி திருவள்ளூர் டிஎஸ்பி அலுவலகம் எதிரில் சாலை தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதனால் சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. ஆந்திர மாநிலம் கடப்பா பகுதியிலிருந்து சிமென்ட் கலவையை டேங்கர் லாரி மூலம் எடுத்துக்கொண்டு திருத்தணியை சேர்ந்த பாபு என்பவர் நேற்று வந்துள்ளார். சென்னையில் சிமென்ட் கலவையை இறக்கிவிட்டு மீண்டும் திருவள்ளூர் வழியாக டேங்கர் லாரியை ஓட்டி வந்துள்ளார்.
இந்நிலையில், திருவள்ளூர் டிஎஸ்பி அலுவலகம் அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலை தடுப்பு சுவரில் பலமாக மோதி விபத்துக்குள்ளானது. இதனால் சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் நேற்று அமாவாசை தினம் என்பதால் வீரராகவர் கோயிலுக்கு அதிக அளவு வந்த பக்தர்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கினர். இதனால் பள்ளி, கல்லூரிக்கு செல்பவர்கள் வேலைக்கு செல்பவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். பின்னர் தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளான லாரியை அப்புறப்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். இந்த விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.