களைகட்டும் கலை படிப்புகள்

தனக்கு விருப்பமான கலைப் பாடத்தைத் தேர்வு செய்வதுடன் அவற்றைத் தரமான கல்வி நிறுவனத்தில் சேர்ந்து படிப்பதன் மூலம் மாணவர்கள் தங்களது தகுதியை மேலும் உயர்த்திக்கொள்ளலாம். உதாரணத்துக்கு இளங்கலை முடித்தவர்கள், முதுகலையை டெல்லி பல்கலைக்கழகம், டெல்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகம் போன்ற செறிவான பாடத்திட்டம் கொண்ட சர்வதேசத் தரத்திலான கல்வி நிலையங்களில் கற்றுத் தங்கள் தகுதியை உயர்த்திக்கொள்ளலாம். பரவலான இளங்கலை வாய்ப்புகள்: மாணவர்கள் தமது தனிப்பட்ட பாட விருப்பம், விரும்பிய கல்லூரியில் விரும்பிய பாடம் கிடைப்பது, எதிர்பார்க்கும் வேலைவாய்ப்பு ஆகியவற்றைப் பொறுத்து இளங்கலையில் பாடத்தை முடிவு செய்யலாம்.

தமிழகக் கல்லூரிகளைப் பொறுத்தவரை அரசியல் அறிவியல், தத்துவம், பொது நிர்வாகம், சமூகவியல் போன்ற துறைகள் அரிதாகவும், பொருளாதாரம், வரலாறு, இலக்கியம் போன்றவை பரவலாகவும் தேர்வுசெய்யப்படுகின்றன. இளங்கலையில் பொருளாதாரத் துறை வட இந்தியாவில் மிகவும் பிரபலமானது. உயர் மதிப்பெண் பெறும் மாணவர்கள் பொறியியலுக்கு இணையாகப் பொருளாதாரப் படிப்புக்கான சேர்க்கைக்குப் போட்டிபோடுகிறார்கள். இதைப் படித்துவிட்டு ஐ.இ.எஸ். எனப்படும் இந்திய பொருளாதாரப் பணி அதிகாரியாகவும் ஆகலாம். பொருளாதாரம், புள்ளியியல் இணைந்த ‘‘எக்கனாமெட்ரிக்ஸ்’’ படிப்பு, வேலைவாய்ப்பு அடிப்படையில் தற்போது பிரபலமாகி வருகிறது. இதேபோன்று குடும்பம், அமைப்புகள், சிந்தனைகள் தொடர்பான சமூகவியல் பாடம் சுவாரசியமானதும்கூட.

தமிழகத்தில் பெரும்பான்மையான அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் வரலாறு படிக்கலாம். பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியராகும் வாய்ப்புகளுடன், போட்டித் தேர்வுகள் முதல் குடிமைப் பணி தேர்வுவரை இலக்காகக் கொண்டவர்கள் எளிமையான இப்படிப்பைத் தேர்வு செய்கின்றனர். சமூக அறிவியல் படிப்புகளைத் தமிழகத்தின் பெரும்பாலான அரசுக் கல்லூரிகள் வழங்குகின்றன. சமூக அடிப்படையிலான பல்வேறு ஊக்கத் தொகைகள் கிடைக்கும் என்பதால் அரசுக் கல்லூரிகளில் செலவின்றிப் படிக்கலாம். டெல்லி லேடி ராம் (மகளிர்), சென்னை லயோலா, பெங்களூர் கிறைஸ்ட் பல்கலைக்கழகம், மும்பை செயின்ட் சேவியர் போன்றவை சமூக அறிவியல் துறைகளுக்கான இந்தியாவின் ‘‘டாப்’’ கல்லூரிகளில் முதல் வரிசையில் உள்ளன.

Related Stories: