விருப்ப ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு புதிய வெயிட்டேஜ்: அரசாணை வெளியீடு

சென்னை: அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்த்தப்பட்டுள்ள நிலையில், விருப்ப ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு, புதிய வெயிட்டேஜிக்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து மனிதவள மேம்பாட்டுத் துறை செயலாளர் மைதிலி ராஜேந்திரன் வெளியிட்ட அரசாணையில் கூறியுள்ளதாவது: அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 58 ஆக இருந்த போது அரசு ஊழியர் ஒருவர் 54 வயது மற்றும் அதற்கு கீழ் வயதிற்குள்ளாக விருப்ப ஓய்வு பெற்றிருந்தால் அவர்களுக்கு கூடுதலாக ஐந்து ஆண்டு பணியாற்றியதாக வெயிட்டேஜ் கொடுக்கப்பட்டு அதன் அடிப்படையில் அவருக்கு மாத ஓய்வூதியம் வழங்கப்பட்டு வந்தது.

தற்போது ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்த்தப்பட்டுள்ளதால் 54-க்கு பதிலாக 55 வயது மற்றும் அதற்கு கீழ் பணியாற்றி விருப்ப ஓய்வு கொடுத்தால், அதேபோல ஓய்வு பெறும் வயது ஐம்பத்தி ஆறு என்றால் அவருக்கு நான்காண்டுகள் வெயிட்டேஜ் கொடுக்கப்பட்டு 60 ஆண்டுகள் அவர் பணியாற்றியதாக கருதப்பட்டு மாத ஓய்வூதியம் கணக்கிடப்படும். அதேபோல, 57 வயதாகி ஓய்வு பெற்றால் மூன்று ஆண்டுகள் வெயிட்டேஜ் கொடுக்கப்படும். ஐம்பத்தி ஒன்பது வயதில் விருப்பு ஓய்வு கொடுத்தால் அவர் 60 வயது பணியாற்றியதாக கருதப்பட்டு மாத ஓய்வூதியம் கணக்கிடப்படும். விருப்ப ஓய்வு பெற்ற மாதத்திலிருந்து அவர்களுக்கு சம்பளம் நிறுத்தப்பட்டு ஓய்வு ஊதியம் மட்டுமே வழங்கப்படுவதால், இதுபோன்ற புதிய வெயிட்டேஜிக்கான அரசாணை வெளியிடப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மேலும், 2004க்கு பிறகு சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு மாத ஓய்வூதியம் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Stories: