செங்கல்பட்டில் அதிர்ச்சி சம்பவம் பெண்ணை கடத்தி மது குடிக்க வைத்து கூட்டு பலாத்காரம் செய்த கும்பல்: போலீசார் அதிரடியில் ஒருவர் கைது; 3 பேருக்கு வலை

சென்னை: இளம்பெண்ணை காரில் கடத்தி சென்று, வலுக்கட்டாயமாக மது குடிக்க வைத்து, கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவரது கூட்டாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர். செங்கல்பட்டு அருகே நடந்த இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. செங்கல்பட்டு அருகே ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண், கடந்த 25ம் தேதி செங்கல்பட்டு-காஞ்சிபுரம் பைபாஸ் சாலை பேருந்து நிறுத்தத்தில், வேலூர் செல்ல அரசு பேருந்துக்கு காத்திருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது அங்கு வந்த ஆத்தூர், வடபாதி பாலையம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த நடராஜன் என்பவரின் மகன் சரவணன் (29) மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் சேர்ந்து, அப்பெண்ணை காரில் கடத்தி சென்றனர். பின்னர், ஒரு மறைவான இடத்தில் அப்பெண்ணை வலுக்கட்டாயமாக மது குடிக்க வைத்து, அன்று முழுவதும் சரவணனும் கூட்டாளிகள் 3 பேரும் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பி வீடு திரும்பிய பெண், நடந்த சம்பவங்களை தனது தாயிடம் கூறி, கதறி அழுதாள்.

இதனால், அதிர்ச்சியடைந்த அவர் இதுகுறித்து,  செங்கல்பட்டு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார், கடத்தல், பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து, நேற்று முன்தினம் இந்த வழக்கில்  முக்கிய குற்றவாளியான சரவணனை கைது செய்தனர். பின்னர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவாக உள்ள சரவணனின் கூட்டாளிகள் 3 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: