திருவனந்தபுரம்: கேரளா, கர்நாடக மாநிலம் குடகு பகுதியில் நேற்று காலை லேசான நில அதிர்வு ஏற்பட்டதால் பொதுமக்கள் பீதியடைந்தனர். கேரள மாநிலத்தின் வட எல்லையில் காசர்கோடு மாவட்டம் உள்ளது. இங்குள்ள வெள்ளரிக்குண்டு மற்றும் பனத்தடி அருகே உள்ள கல்லேப்பள்ளி ஆகிய பகுதிகளில் நேற்று காலை 7.45 மணியளவில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது. இதனால், வீடுகளில் இருந்தவர்கள் பீதியடைந்து வீட்டை விட்டு வெளியே ஓடினர். சில பகுதிகளில் வீடுகளில் லேசான விரிசலும் ஏற்பட்டது. இதேபோல், காசர்கோடு அருகே உள்ள கர்நாடக மாநிலம், குடகு பகுதியிலும் லேசான நில அதிர்வு உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுக்கோளில் 3.5 புள்ளிகளாக பதிவாகி இருந்தது. காசர்கோட்டிலும், குடகிலும் இந்த நில அதிர்வு நான்கு வினாடிகள் வரை நீடித்தது.