முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு விளையாட்டு துறையிலும் முன்னேறும் தமிழகம்

சென்னை: விளையாட்டு துறையிலும் முன்னோக்கிய பாய்ச்சலில் செல்கிறது தமிழகம் என்று தென்னக விளையாட்டு மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். சென்னையில் நேற்று நடந்த தென்னக விளையாட்டு மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, திமுக ஆட்சி அமைந்ததற்குப் பிறகு, அனைத்துத் துறைகளிலும் பல்வேறு முன்னெடுப்புகளைச் செய்து வருகிறது என்பது எல்லோருக்கும் நன்றாகத் தெரியும். அதிலும் குறிப்பாக ஒரு திராவிட மாடல் ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறோம். தமிழ்நாடு அனைத்து வகையிலும், அனைத்துத் துறைகளிலும் மேம்பட்டு விளங்க முயற்சித்துக் கொண்டு இருக்கிறோம்.

அதில் ஒரு முக்கியமான துறை தான், விளையாட்டுத் துறை. அத்தகைய விளையாட்டுத் துறையிலும் முன்னோக்கிய பாய்ச்சலில் தமிழ்நாடு இன்றைக்கு சென்று கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் ஒப்புக் கொண்டாக வேண்டும். குறிப்பாக, வருகின்ற ஜூலை 28 அன்று 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையில் நடப்பது நமக்குக் கிடைத்திருக்கக்கூடிய ஒரு மிகப்பெரிய பெருமை என்பதை நாம் உணர்ந்திருக்கிறோம். 200 நாடுகள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்க உள்ள செஸ் ஒலிம்பியாட் திருவிழா, முதல்முறையாக நம்முடைய சென்னை மாநகரில் நடைபெற இருக்கிறது.

இந்தியாவில் நடப்பது இது முதல் முறை என்பதையும், அதையும் தாண்டி பெருமையாக சொல்ல வேண்டுமென்றால், அந்த முதல் முறையும் நம்முடைய தமிழ்நாட்டில் நடப்பதுதான் நமக்குக் கிடைத்திருக்கக்கூடிய மகிழ்ச்சி. இதனால் சர்வதேச அளவில் தமிழகம் அனைவராலும் உற்றுநோக்கக்கூடிய ஒரு மாநிலமாக மாறப் போகிறது. இந்த சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை நடத்துவதற்காக மாநில அரசு ரூ.92 கோடியே 13 லட்சம் நிதியை ஒதுக்கியிருக்கிறது. 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான இலச்சினை மற்றும் சின்னத்தை சில வாரங்களுக்கு முன்னால் நான் வெளியிட்டேன். அதற்கு ‘தம்பி’ என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. இத்தகைய ‘கவுண்ட் டவுன்’ தொடங்கப்பட்டுள்ள நேரத்தில் இந்த கான்க்ளேவ் நடப்பது மிகமிகப் பொருத்தமாக அமைந்திருக்கிறது.

நானும் கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளில் ஆர்வம் உள்ளவன்தான். மேயர் ஆனபோதும் கிரிக்கெட் போட்டியில் கலந்துகொண்டு நான் விளையாடி இருக்கிறேன். எத்தகைய பணிச்சூழல்கள் இருந்தாலும் மறைந்த நம்முடைய தமிழக முதல்வராக இருந்த கலைஞரும் கிரிக்கெட் போட்டிகளைத் தவறாமல் பார்த்துவிடுவார். திமுக ஆட்சி அமைந்தவுடனே ஒரு அறிவிப்பைச் செய்தோம். அதாவது ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வெல்லக்கூடிய வீரர்களுக்கு ரூ.3 கோடி, வெள்ளிப்பதக்கம் வெல்லக்கூடிய வீரருக்கு ரூ.2 கோடி, வெண்கலப்பதக்கம் வெல்லக் கூடிய வீரரூக்கு ரூ.1 கோடி என்று அறிவித்தோம்.

இது மிகப்பெரிய பரிசுத் தொகை. டோக்கியோ ஒலிம்பிக், பாராலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ளும் வீரர்களுக்கு தலா ரூ.5 லட்சம் வீதம் 55 லட்சம் வழங்கினோம். வாள்சண்டை வீராங்கனை பவானி தேவிக்கு டோக்கியோ ஒலிம்பிக்கில் கலந்துகொள்ள ரூ.5 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினோம். தமிழ்நாடு உடற்கல்வி இயல் மற்றும் விளையாட்டுப் பல்கலையில் இறகுப்பந்து பயிற்சிக் கூடம், மேசைப்பந்து பயிற்சிக் கூடம், தங்கும் விடுதி, ஆய்வகம் ஆகியவை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கெல்லாம் மேலாக, மகுடம் வைத்தாற்போல மதுரையில், அலங்காநல்லூரில் நமது பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கென பிரமாண்டமான அரங்கம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. வரும் ஆண்டில் கட்டுமானப் பணிகள் துவங்கப்படவிருக்கிறது என்பதையும் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். அதேபோல், மாவட்ட அளவில் விளையாட்டுகளை ஊக்குவிக்கும் வகையில், ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் விளையாட்டு அரங்கம் அமைக்கவும் இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் நம்முடைய அரசு வெளியிட்டிருக்கிறது. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இவை அனைத்தும் இந்த ஓராண்டு காலத்தில் செய்யப்பட்டவை.

தமிழக விளையாட்டுத் துறை மிகமிக வேகமாகவும், சுறுசுறுப்பாகவும் செயல்பட்டு வருகிறது என்பதை இதன்மூலம் நாம் அறியலாம். இத்தகைய விளையாட்டு வீரர்களைத் தேடியும், உருவாக்கியும் வருகிறது நம்முடைய அரசு. இத்தகைய செயல்பாடுகளுக்கு ஊக்கம் அளிப்பதாக இந்த மாநாடு அமைந்திருக்கிறது. நமது மாநிலத்திலுள்ள அனைத்து விளையாட்டு வீரர்களையும் ஊக்கப்படுத்தவும், அனைத்து விளையாட்டுக்களையும் மேம்படுத்தவும் இங்கேயே சர்வதேச விளையாட்டு வீரர்களை உருவாக்கவும் இந்த மாநாடு அடித்தளம் அமைக்கும் என்று நம்புகிறேன். விளையாட்டுத் துறையைப் பொறுத்தவரையில் எத்தனையோ கனவுகள் நமது அரசிற்கு இருக்கிறது. அவற்றை நனவாக்கும் வகையில் விளையாட்டுத் துறை இன்னும் சிறக்க வழிவகைகளை நாம் காணவேண்டும். இவ்வாறு முதல்வர் பேசினார்.

Related Stories: