முகூர்த்த நாட்கள் முடிவடைந்ததால் ஈரோடு ஜவுளி சந்தையில் வியாபாரம் மந்தம்

ஈரோடு: முகூர்த்த நாட்கள் முடிவடைந்ததால் ஈரோடு ஜவுளி சந்தையில் வியாபாரம் மிகவும் மந்தமாக இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். ஈரோடு ஜவுளி சந்தையில் கடந்த சில நாட்களாக பள்ளி சீருடை, முகூர்த்த ஜவுளிகள் விற்பனை அதிக அளவில் நடைபெற்று வந்தது. மேலும் உள்ளூர் திருவிழாக்களையொட்டி வேட்டி, சேலை, துண்டு உள்ளிட்டவைகள் விற்பனையானது. இந்நிலையில் முக்கிய முகூர்த்த நாட்கள் முடிவடைந்ததையடுத்து இன்று நடைபெற்ற ஜவுளி சந்தையில் விற்பனை மந்தமாக காணப்பட்டது.

ஆடி மாதம் தொடக்கம் வரை இதே நிலை நீடிக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து ஜவுளி சந்தை வியாபாரிகள் கூறியதாவது, ஆனி மாதத்தின் முக்கிய முகூர்த்த நாட்கள் நிறைவடைந்துவிட்டதால் ஜவுளி சந்தையில் வியாபாரம் மந்தமாக காணப்பட்டது. சில்லரை விற்பனை 30 சதவீதமும், மொத்த வியாபாரம் 20 சதவீதம் மட்டுமே நடைபெற்றது. வழக்கமாக ஆந்திரா வியாபாரிகள் இந்த காலகட்டத்தில் வந்து ஜவுளிகளை கொள்முதல் செய்வது வழக்கம்.

ஆனால் இந்தாண்டு ஆந்திரா வியாபாரிகள் யாரும் வரவில்லை. கேரளாவில் இருந்து வர வேண்டிய ஆர்டர்களும் வரவில்லை. ஆடி மாதம் தொடக்கம் வரை இதே நிலை தான் நீடிக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இவ்வாறு வியாபாரிகள் கூறினர்.

Related Stories: