ஜூன் 28, 2022 செவ்வாய்கிழமை உயரும் பொருளாதாரம்: அமைச்சர் பியுஷ் கோயல்

சென்னை: ‘‘சர்வதேச அளவில், 236 லட்சம் கோடி ரூபாய் பொருளாதாரத்தோடு நம்நாடு உயர்ந்து நிற்கிறது’’ என்று ஒன்றிய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியுஷ் கோயல் கூறினார்.

கோவையில் நடந்த தொழில் நிறுவன அதிபர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ஒன்றிய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியுஷ் கோயல் பேசியதாவது:

நம் நாட்டில் டிஜிட்டல் வர்த்தகம் சிறப்பாக உள்ளது.

இதனால், வாடிக்கையாளர்கள் விருப்பப்படி விற்பனையாளர்களுடன் நேரடி தொடர்பு வைத்துக்கொள்ள முடிகிறது. இணையவழி இயங்குதளங்கள் கட்டுப்பாடானவை. அவை வணிக நிறுவனங்கள், நுகர்வோர் இடையே பாலமாக விளங்குகிறது. டிஜிட்டல் முன்னேற்றத்தால் ஏற்பட்டுள்ள நல்ல வாய்ப்புகளை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நம் நாடு அதிக மக்கள் தொகை கொண்டது. நாட்டின் பொருளாதாரம் தற்போது 3.2 டிரில்லியன் அமெரிக்க டாலராக அதாவது 236 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.

மிகுந்த நம்பகத்தன்மையுடைய தலைமை மற்றும் ஜனநாயக கட்டமைப்புடன் நம் நாடு திகழ்கிறது. இதனால், நாட்டின் பொருளாதாரம் மென்மேலும் உயர்ந்து வருகிறது. அனைத்து துறைகளிலும் வெளிப்படையான நிர்வாகத்தை, ஒன்றிய அரசு ஆதரிக்கிறது. நிலையான கொள்கை வாயிலாக, நல்ல ஸ்திரமான கட்டமைப்பு உருவாகி வருகிறது. ஒவ்வொரு நிறுவனங்களின் முதலீட்டையும் மதித்து வருவதால், ஜவுளி, பொறியியல் உள்ளிட்ட துறைகள் அபரிமிதமாக வளர்ந்து வருகின்றன. இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிலையில், ஜி 7 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜெர்மன் சென்றுள்ள பிரதமர் மோடி, தலைநகர் முனீச் நகரில் இந்தியர்களிடையே உரையாடினார். அப்போது அவர் கூறியதாவது: கலாசாரம், உணவு, உடை, பன்முகத்தன்மை உள்ளிட்டவை நமது ஜனநாயகத்தை துடிப்பானதாக்குகிறது. தற்போது 4வது தொழிற்புரட்சியில் பின்தங்காமல் இந்தியா உலகையே வழிநடத்தி வருகிறது. 90 சதவீதத்தினர் கொரோனா இரண்டாவது தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.

99 சதவீத கிராமங்களில் சமையல் எரிவாயுவை பயன்படுத்தி வருகின்றனர். கடந்த 2 ஆண்டுகளில் 80 கோடி ஏழைகளுக்கு இலவச ரேஷன் வழங்கப்பட்டுள்ளது. இந்திய விவசாயிகள் இயற்கை விவசாயத்திற்கு மாறி வருகின்றனர். பருவநிலை மாற்றம் என்பது இந்தியாவின் கொள்கைகள் மட்டுமல்லாது நிலையான காலநிலை நடைமுறைகள் இந்திய மக்களின் வாழக்கையின் ஒரு அங்கமாகி விட்டன.

நாட்டை தூய்மையாக வைத்திருப்பது தங்கள் கடமை என மக்கள் இப்போது புரிந்து கொண்டுள்ளனர். இந்தியா இப்போது முன்னேற்றம், வளர்ச்சி மற்றும் அதன் கனவுகளை நிறைவேற்ற தயாராகி வருகிறது. பெட்ரோலில் 10 சதவீதம் அளவிற்கு எத்தனாலை கலப்பது என்பதை இலக்காக வைத்திருந்தோம் அதனை கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்னதாகவே அடைந்து விட்டோம். இவ்வாறு பிரதமர் மோடி பெருமிதத்துடன்  உரையாடினார்.

Related Stories: