ஒடிசாவின் பூரி நகரத்தில் வரும் 1ம் தேதி ரத யாத்திரை

புவனேஸ்வர்: ஒடிசாவின் பூரி நகரில் வரும் 1ம் தேதி ரத யாத்திரை நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. ஒடிசாவின் புவனேஸ்வரில் ஜெகந்நாதர் கோயில் ரத யாத்திரை மிகவும் புகழ்பெற்றது. ஆண்டுதோறும் விமரிசையாக நடைபெறும் இந்த ரத யாத்திரையில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள். கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பக்தர்கள் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் மீண்டும் பக்தர்கள் பங்கேற்புடன் வரும் 1ம் தேதி பூரி ரத யாத்திரை நடைபெறுகிறது. இதற்கு வெளிநாடுகள் மற்றும் உள்நாட்டில் இருந்து 10 லட்சம் பேர் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒடிசாவில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் ரத யாத்திரைக்கு வரும் பக்தர்கள் முககவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், ரயில், பஸ் நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் சுகாதார முகாம்கள் நடத்தப்படும். கொரோனா அறிகுறி உள்ளவர்கள் பூரிக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்று ஒடிசா சுகாதார சேவைகள் இயக்குனர் பிஜாய் மொகபத்ரா நேற்று தெரிவித்தார். பூரியில் கொரோனா சிகிச்சை மையங்களும் அமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர்.

Related Stories: