பஸ் மேற்கூரையில் நடனம் பள்ளி மாணவர் படுகாயம்

பெரம்பூர்: பெரம்பூரில் நேற்று மாலை மாநகர பேருந்தின் கூரைமீது நடனமாடிய பள்ளி மாணவர் கீழே தவறி விழுந்ததில் படுகாயம் அடைந்தார். இதுகுறித்து போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். சென்னை பிராட்வேயில் இருந்து கொளத்தூர், பெரியார் நகருக்கு நேற்று மாலை ஒரு மாநகர பேருந்து சென்று கொண்டிருந்தது. இப்பேருந்தில் ஓட்டேரியை சேர்ந்த டிரைவர் சம்பத் (53), மாதவரத்தை சேர்ந்த ஜனார்த்தனன் (42) ஆகிய இருவரும் பணியில் இருந்தனர்.

இப்பேருந்து பெரம்பூர், பேப்பர் மில்ஸ் சாலை அருகே வந்தபோது, அதே பகுதியில் தனியார் பள்ளியை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஏறினர். இதில் படிக்கட்டில் நின்றிருந்த கொளத்தூர், கம்பர் நகர், ரமணிபாய் குறுக்கு தெருவை சேர்ந்த 16 வயது சிறுவன், பேருந்தின் மேற்கூரைமீது ஏறினான். பின்னர் அங்கு நின்றபடி நடனமாடியதாக கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து, அப்பேருந்து பெரவள்ளூர் சாலை, அகரம் பேருந்து நிலையம் அருகே வந்தபோது பேருந்தின்மீது சாய்வாக இருந்த மரக்கிளை உரசியது. இதில் மேற்கூரையில் நின்றிருந்த பள்ளி மாணவன் கீழே தவறி விழுந்ததில் படுகாயம் அடைந்தான்.

அவனை அக்கம்பக்கத்தினர் மீட்டு, பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்து, அந்த மாணவனை சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பினர். அங்கு மாணவன் தீவிர சிகிச்சை பெற்று வருகிறான். இதுகுறித்து மாநகர பேருந்து ஊழியர்கள் அளித்த புகாரின்பேரில், வில்லிவாக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories: