அர்ச்சகரிடம் ரூ. 2.50 கோடி மோசடி சென்னை தாய், மகனுக்கு வலை

புதுச்சேரி: புதுச்சேரி சின்னையாபுரம் அக்கா சுவாமிகள் மடம் வீதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவர் உருளையன்பேட்டையில் உள்ள ஒரு கோயிலில் அர்ச்சகராக உள்ளார். கடந்த 2020 ஆகஸ்ட்டில் கிருஷ்ணனுக்கு சென்னை திருவான்மியூர், காமராஜர் நகரைச் சேர்ந்த ரமா என்ற மகாலட்சுமி (55), அவரது மகன் சபரி ஆகியோர் அறிமுகமாகினர்.

இவர்கள் தாங்கள் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் பணியாற்றுவதாக கிருஷ்ணனிடம் கூறியதோடு, வீடு கட்டுவதற்கு பல கோடி கடனாக பெற்றுத் தருவதாகவும், 6 மாதம் கழித்து அரசே கடனை தள்ளுபடி செய்துவிடும் எனவும் ஆசை வார்த்தைகளை கூறியுள்ளனர்.

இதற்கான அனுமதி பெறுவதற்காக ரமாவும் சபரியும் கேட்டுக் கொண்டதற்கிணங்க கிருஷ்ணன் பல்வேறு தவணையாக ரூ.2 கோடியே 50 லட்சம் அவர்களிடம் கொடுத்தாராம். ஆனால், சொன்னபடி அவர்கள் செய்யவில்லை.

பணத்தை திருப்பி தரும்படி கேட்டபோது மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து அர்ச்சகர் கிருஷ்ணன் புதுச்சேரி சிபிசிஐடி காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து சென்னையைச் சேர்ந்த ரமா, சபரி ஆகியோரை தேடி வருகின்றனர்.

Related Stories: