தோகைமலை அருகே கோயில்குளத்தில் சமூக ஒற்றுமை மீன்பிடி திருவிழா-18 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்தது

தோகைமலை : தோகைமலை அருகே திருமாணிக்கம்பட்டி கோவில் குளத்தில் 18 ஆண்டுகளுக்கு பிறகு சமூக ஒற்றுமையின் மீன்பிடி திருவிழா நடந்தது.கரூர்மாவட்டம் தோகைமலை ஊராட்சி திருமாணிக்கம்பட்டியில் சுமார் 30 ஏக்கர்பரப்பளவில் அரசுக்கு சொந்தமான கோவில் குளம் உள்ளது. பருவமழையின் போது நீர்பிடிப்பு பகுதிகளில் இருந்து வரும் மழைநீர் இக்குளத்தில் தேங்கி நிற்கிறது. தேங்கி நிற்கும் மழைநீரானது மதகு வழியாக அருகில் உள்ள விவசாய நிலங்களுக்கும், சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கு குடிநீர்ஆதாரமாகவும் பயன்பட்டு வருகிறது.

இதேபோல் மழைகாலங்களில் மழைநீரோடு பல்வேறு வகையான மீன்கள் கோவில் குளத்திற்கு வருது உண்டு. இந்த குளத்தில் வளர்ந்து வரும் மீன்களை கோடைகாலங்களில் தண்ணீர்வற்றும் போது அனைத்து சமூகத்தினரும் ஒன்று சேர்ந்து மீன்படிப்பது வழக்கம். அப்போது மீன் பிடி திருவிழாவாக வெள்ளை விசிறி மீன்களை பிடிக்க தொடங்குவர். ஆனால் மழை காலங்களில் இக்குளம் நிரம்பினாலும் சுற்று வட்டார பகுதிகளில் போதிய மழை இல்லாமல் மீன்கள் வராமல் இருந்தது.

இந்நிலையில் கடந்த ஆண்டு அனைத்து பகுதிகளிலும் பருவமழை பெய்தது. இதனால் அனைத்து பகுதிகளிலும் உள்ள ஏரிகள், குளங்கள், தடுப்பனைகள் மழைநீரால் நிரம்பி வழிந்தது. இதனை அடுத்து பெரும்பாலான ஏரி, குளங்களுக்கு பல்வேறு வகையான மீன்கள் வரத்தொடங்கியது. இதேபோல் திருமாணிக்கம்பட்டி கோவில் குளத்திற்கும் பல்வேறு வகையான மீன்கள் வளர்ந்து வந்தது. தற்போது கோடைகாலம் தொடங்கியதால் இந்த குளத்தில் உள்ள மீன்களை பிடிக்க ஊர் முக்கியஸ்தர்கள் முடிவு செய்தனர். இதனை அடுத்து கிராம மக்களின் ஒற்றுமையை பறைசாற்றும் வகையில் 18 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று சமூக ஒற்றுமையின் மீன்பிடி திருவிழா நடந்தது.

இந்த விழாவிற்கு திருமாணிக்கம்பட்டி முக்கியஸ்தர் ரெத்தினம் தலைமை வகித்து வெள்ளை துண்டை விசிறி மீன்படி திருவிழாவை தொடங்கி வைத்தார். இதில் தோகைமலை ஊராட்சி உள்பட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு தூரி, வலை, சேலைகள் ஆகியவற்றை கொண்டு கொரவை, அயிரை, முள்ளு கண்டை, விரால் போன்ற பல்வேறு வகையான மீன்களை பிடித்து சென்றனர். 18 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று சமூக ஒற்றுமையின் மீன்பிடி திருவிழா நடந்ததால் இப்பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Related Stories: