கிணற்றில் டிராக்டர் கவிழ்ந்து வாலிபர் பலி

கீழ்பென்னாத்தூர் : கீழ்பென்னாத்தூர் அடுத்த நாரியமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட கார்ணாம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் நாராயணசாமி மகன் பூவரசன்(22). அதே பகுதியை சேர்ந்த பாபு என்பவருக்கு சொந்தமான டிராக்டரை, பூவரசன் சொந்த வேலைக்காக நேற்று எடுத்து சென்றார். பின்னர், வீடு திரும்பும்போது அதே பகுதியை சேர்ந்த அண்ணாமலை மகன் குமரன்(37) என்பவர் டிராக்டரில் அமர்ந்து கொண்டு வந்தார்.

தொடர்ந்து, டிராக்டரின் உரிமையாளர் பாபு வீட்டின் அருகே டிராக்டரை நிறுத்தியபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த கிணற்றில் தலைகீழாக கவிழ்ந்தது. இதில், டிராக்டரை ஓட்டி வந்த பூவரசன் கிணற்றில் உள்ள மின்மோட்டாரில் கட்டியிருந்த கயிற்றை பிடித்து கொண்டு லேசான காயத்துடன் வெளியே வந்துவிட்டார். ஆனால், உடன் வந்த குமரனுக்கு நீச்சல் தொரியாததால் கிணற்றில் மூழ்கி பரிதாபமாக பலியானார்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் அளித்த தகவலின்பேரில், கீழ்பென்னாத்தூர் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர், கிணற்றில் இருந்த தண்ணீரை 4 மின் மோட்டார்கள் மூலம் வெளியேற்றினர்.தொடர்ந்து, கிரேன் உதவியுடன் குமரன் சடலத்தை மீட்டு மேலே கொண்டு வந்தனர். டிராக்டரையும் வெளியே கொண்டு வந்தனர். பின்னர், சடலத்தை பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கீழ்பென்னாத்தூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: