தூத்துக்குடி அருகே ஆட்டோ கவிழ்ந்து எல்.கே.ஜி மாணவன் உயிரிழந்த சம்பவம்...ஆட்டோ ஓட்டுனர்களுக்கு மாவட்ட ஆட்சியர் விழிப்புணர்வு

தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே ஆட்டோ கவிழ்ந்து எல்.கே.ஜி மாணவன் உயிரிழந்த சம்பவத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆட்டோ ஓட்டுனர்களுக்கு மாவட்ட ஆட்சியர் விழிப்புணர்வு நடவடிக்கை மேகொண்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் நாட்டார்குளத்தை சேர்ந்தவர் சரவணன். இவருக்கு சொந்தமான ஆட்டோவில் அதே ஊரை சேர்ந்த அந்தோணி மகன் ராஜி என்பவர் பள்ளி குழந்தைகளை ஏற்றிக்கொண்டு நெல்லை பாளையங்கோட்டை பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு அழைத்து செல்வது வழக்கம்.

அவர் நேற்று காலை பாளையங்கோட்டை அருகே உள்ள ஊத்துபாறையை சேர்ந்த ராஜா மகன் செல்வநவீன் (வயது5) உள்பட 8 மாணவ-மாணவிகளை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு பாளையங்கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார். இதில் செல்வநவீன் பாளையங்கோட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் சேர்க்கப்பட்டிருந்த எல்.கே.ஜி. மாணவன்.

நெல்லை அருகே அனவரதநல்லூர் இந்திராநகர் அருகில் சென்றபோது, எதிர்பாராதவிதமாக ஆட்டோ நிலைதடுமாறி சாலையோரத்தில் கவிழ்ந்தது. இதில் சிறுவன் செல்வநவீன் ஆட்டோக்கு அடியில் சிக்கிக் கொண்டான். அதில் அவன் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.  ஆட்டோவில் இருந்த மற்ற 7 மாணவ-மாணவிகளில் முகிலா, நவீன்குமார் ஆகிய 2 பேர் படுகாயம் அடைந்தனர். 5 பேர் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.

இந்தநிலையில், பள்ளி குழந்தைகளை ஏற்றிச் செல்லும் ஆட்டோ ஓட்டுனர்கள் விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். மேலும்  விதிமுறைகளை கடைபிடிக்காத ஆட்டோ ஓட்டுநர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

Related Stories: