சென்னை விமான நிலையத்தில் வெளிநாட்டு கரன்சியை கடத்த முயன்ற இலங்கை பெண் கைது

சென்னை: கொழும்புக்கு வெளிநாட்டு கரன்சியை கடத்தி செல்ல முயன்ற இலங்கை பெண்ணை சுங்கத்துறையினர் கைது செய்தனர். சென்னையிலிருந்து இலங்கையின் கொழும்பு நகருக்கு செல்லும் ஏர் இந்தியா பயணிகள் விமானம் நேற்று அதிகாலை புறப்பட தயாரானது. அதில் பயணிக்க வந்த பயணிகளை, சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் நிறுத்தி சோதனை செய்தனர். இந்நிலையில், இலங்கையைச் சேர்ந்த 27 வயது பெண் பயணி, சுற்றுலா விசாவில் சென்னைக்கு வந்துவிட்டு மீண்டும் இலங்கைக்கு செல்ல விமான நிலையம் வந்திருந்தார். அவருடைய உடமைகளுக்குள் சவுதி ரியால் வெளிநாட்டு கரன்சி மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். அதன் இந்திய மதிப்பு ரூ.10 லட்சம்.

இதையடுத்து சுங்க அதிகாரிகள் இலங்கை பெண் பயணியின் பயணத்தை ரத்து செய்து அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்த ரூ.10 லட்சம் மதிப்புடைய வெளிநாட்டு பணத்தையும் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.

இலங்கை பெண், அங்கிருந்து சென்னை வந்தபோது, தங்கம் கடத்தி வந்தாரா, இப்போது மீண்டும் இங்கிருந்து போகும்போது வெளிநாட்டு கரன்சியை எடுத்து செல்கிறாரா என்பது பற்றியும் விசாரணை நடக்கிறது. சென்னை விமான நிலையத்தில் நேற்று ஒரே நாளில் 3 இலங்கை பெண்கள் தங்கம் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் ஒரு இலங்கை பெண் வெளிநாட்டு பணம் கடத்தலில் கைது செய்யப்பட்டு இருக்கிறார். சென்னை விமான நிலையத்தில் சமீப காலமாக இலங்கை பெண் பயணிகள் பலர் இதேபோல் கடத்தல் குற்றங்களில் ஈடுபட்டு, கைது செய்யப்படுவது அதிகரித்து வருகிறது. இதற்கு காரணம் இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால், வாழ்வாதாரத்துக்காக, இந்த பெண்கள் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.

Related Stories: