சென்னை: கொழும்புக்கு வெளிநாட்டு கரன்சியை கடத்தி செல்ல முயன்ற இலங்கை பெண்ணை சுங்கத்துறையினர் கைது செய்தனர். சென்னையிலிருந்து இலங்கையின் கொழும்பு நகருக்கு செல்லும் ஏர் இந்தியா பயணிகள் விமானம் நேற்று அதிகாலை புறப்பட தயாரானது. அதில் பயணிக்க வந்த பயணிகளை, சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் நிறுத்தி சோதனை செய்தனர். இந்நிலையில், இலங்கையைச் சேர்ந்த 27 வயது பெண் பயணி, சுற்றுலா விசாவில் சென்னைக்கு வந்துவிட்டு மீண்டும் இலங்கைக்கு செல்ல விமான நிலையம் வந்திருந்தார். அவருடைய உடமைகளுக்குள் சவுதி ரியால் வெளிநாட்டு கரன்சி மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். அதன் இந்திய மதிப்பு ரூ.10 லட்சம்.
இதையடுத்து சுங்க அதிகாரிகள் இலங்கை பெண் பயணியின் பயணத்தை ரத்து செய்து அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்த ரூ.10 லட்சம் மதிப்புடைய வெளிநாட்டு பணத்தையும் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.