வாலாஜாபாத்:வாலாஜாபாத் ஒன்றியம் ஈஞ்சம்பாக்கம் கிராமத்தில் ₹ 1.37 கோடியில் மாணவர் விடுதி கட்டும் பணியினை காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன் அடிக்கல் நாட்டி வைத்து துவக்கி வைத்தார். காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியத்திற்குட்பட்ட ஈஞ்சம்பாக்கம் ஊராட்சியில், அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளியில் சுமார் 1000க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கென தனி விடுதி கட்டித்தரக்கோரி காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசனிடம் கோரிக்கை வைத்திருந்தனர். அதனடிப்படையில், பொதுமக்களின் கோரிக்கை ஏற்று அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளியில் சுமார் ₹ 1.37 கோடி மதிப்பில் மாணவியர் விடுதி கட்டுவதற்கான பணி திட்டமிடப்பட்டது.