திருமலை: திருப்பதி மலைப்பாதையில் யானைகள் நடமாட்டம் அதிகளவு உள்ளது. இதனால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்லவும், திருமலையில் இருந்து திருப்பதிக்கு வரவும் 2 மலைப்பாதைகள் உள்ளது. இதில் திருமலையில் இருந்து திருப்பதி செல்லும் முதலாவது மலைப்பாதை வளைவு அருகே வனப்பகுதியில் இருந்து சாலையை நோக்கி நேற்று முன்தினம் 11 யானைகள் கூட்டம் வந்தது. அப்போது இவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள், மற்றும் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த தேவஸ்தான வனத்துறை மற்றும் விஜிலென்ஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு கூட்டமாக நின்று கொண்டிருந்த யானைகளை ஒலிபெருக்கி மூலம் சத்தம் எழுப்பியும், மேளம் அடித்தும் வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.