கவுகாத்தி: வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள வடகிழக்கு மாநிலங்களுக்கு, நிவாரண பொருட்களை ரயில்களில் இலவசமாக அனுப்பலாம் என்று வடகிழக்கு ரயில்வே அறிவித்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் பெய்த வரலாறு காணாத மழையால் ஆயிரக்கணக்கான கிராமங்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது. குறிப்பாக, அசாமில் சுமார் 60 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், அசாமுக்கு ரயில்கள் மூலம் இலவசமாக நிவாரண பொருட்களை அனுப்பலாம் என்று வடகிழக்கு ரயில்வே செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘நாட்டின் எந்தப் பகுதியிலிருந்தும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வடகிழக்கு மாநிலங்களுக்கு அனைத்து நிவாரணப் பொருட்களை ரயில்கள் மூலம் அனுப்ப சரக்குக் கட்டணங்கள் நீக்கப்பட்டுள்ளன. அரசு சார்பற்ற நிறுவனங்கள் அரசாங்கத்தைப் போலவே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரணப் பொருட்களை இலவசமாக அனுப்பலாம். வடகிழக்கு மாநிலங்களுக்கு செல்லும் பல்வேறு ரயில்களில் கூடுதல் பெட்டிகள் மற்றும் வசதிகள் தொடர்பாக கோட்ட ரயில்வே மேலாளர்களிடமிருந்து அனுமதி பெற வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.