சென்னை: தனியார் பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டத்தின் (RTE) கீழ் சேருவோரின் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட 2022-23ம் கல்வியாண்டில் ஆண்டில் 31% அதிகரித்துள்ளது. பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் பின்தங்கிய பிரிவினர் தனியார் பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்புகளில் சேர்க்கை பெறும் விதத்தில் கல்வி உரிமைச் சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த சட்டத்தின் படி ஒவ்வொரு ஆண்டும் தனியார் பள்ளிகளில் 25% மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. அதன்படி கொரோனா தொற்றுக்கு முந்தய 2019-20 கல்வியாண்டில் 76,927 மாணவர்கள் நுழைவு நிலை வகுப்புகளில் அனுமதிக்கப்பட்டனர். கடந்த ஆண்டு தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜி மற்றும் முதலாம் வகுப்பில் ஒதுக்கப்பட்ட 25% இடங்களின் கீழ் 56,687 மாணவர்கள் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்தநிலையில் 2022-23 கல்வியாண்டில் தனியார் பள்ளிகளில் 25% ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை 74,283 ஆக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டைவிட 31% அதிகமாகும்.